தில்ஷன் கொலை வழக்கு: லெப்டினென்ட் கர்னல் சுட்டதாக கண்டுபிடிப்பு- சுடவேயில்லை என அதிகாரி மறுப்பு
சென்னை தீவுத் திடல் அருகே உள்ள ராணுவக் குடியிருப்புக்குள் புகுந்து கீழே விழுந்து கிடந்த பாதாம் பழங்களை எடுக்க முயன்றான் தில்ஷன்(13). அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தான்.
அவனை சுட்டது ராணுவ வீரர் என்று கூறப்படுகிறது. ஆனால் ராணுவம் இதை மறுத்துள்ளது. எங்களது தரப்பிலிருந்து யாரும் சுடவில்லை என்று ராணுவம் கூறுகிறது. ஆனால் தில்ஷன் உடலில் நடந்த பிரேதப் பரிசோதனையில் தில்ஷன் தலையில் குண்டு பாய்ந்து அதனால்தான் அவன் இறந்ததாக தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கை முதலில் கோட்டை போலீசார் விசாரித்தனர். அப்போது ராணுவத்தினர் தாங்கள் யாரும் சிறுவனை சுட்டுக் கொல்லவில்லை என்றனர். இதையடுத்து தில்ஷனுடன் விளையாடிய சிறுவர்கள் சஞ்சய், பிரவீன் ஆகியோரிடம் விசாரித்தனர். வெள்ளை நிறக் காரில் வந்த ஒரு அதிகாரி தங்களை சத்தம் போட்டதாகவும், அவர் தான் துப்பாகியால் சுட்டதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.
சிபிசிஐடி டிஐஜி ஸ்ரீதர் சம்பவ இடத்திற்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சம்பவத்தின்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த, ராணுவ வீரர்களிடமும் ஸ்ரீதர் விசாரணை நடத்தினார்.
சிபிசிஐடி போலீசாரும் அந்த 2 சிறுவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், எங்களை வெள்ளை நிறக் காரில் வந்த அதிகாரி சத்தம் போட்டார். ஆனால் அவர் துப்பாக்கியால் சுட்டதை நாங்கள் பார்க்கவில்லை. அவர் சத்தம்போட்டவுடன் நாங்கள் வெளியே ஓடிவிட்டோம் என்றனர்.
உடனே சிபிசிஐடி போலீசார் அந்த காரில் வந்த ராணுவ அதிகாரியை கண்டுபிடித்தனர். அந்த அதிகாரியின் வீடு தில்ஷன் சுடப்பட்டதற்கு அருகில் உள்ளது. அவர் தான் சத்தம் போட்டார் என்று அந்த 2 சிறுவர்களும் அடையாளம் காட்டினர். அவர் லெப்டினன்ட் கர்னலாக உள்ளார். அவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
அவரிடம் விசாரித்தபோது அவர் கூறியதாவது,
நான் சிறுவர்கள் மரத்தில் ஏறுவதைப் பார்த்து சத்தம் போட்டேன். உடனே 2 சிறுவர்கள் மதில் சுவரைத் தாண்டிக் குதித்து ஓடிவிட்டார்கள். நானும் அங்கிருந்து சென்றுவிட்டேன். நான் யாரையும் துப்பாக்கியால் சுடவில்லை என்றார்.
அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது. ஆனால் அவர் தான் சுடவேயில்லை என்று மறுத்துவிட்டார். அவர் பெயர் அபய் சிங் என்று கூறப்படுகின்றது. ஆனால் சிபிசிஐடி போலீசார் அந்த அதிகாரியின் பெயரைத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
தில்ஷன் சுடப்பட்ட இடத்திற்கு அருகில் வசிக்கும் மேலும் 3 ராணுவ அதிகாரிகளிடமும் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. அவர்களும் தாங்கள் யாரையும் சுடவில்லை என்று கூறிவிட்டனர். தில்ஷனை சுடப்பட்ட துப்பாக்கி குண்டு இன்னும் சிபிசிஐடி கைக்கு கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன் மேலும் 4 அதிகாரிகளின் துப்பாக்கிகளை வாங்கி ஆய்வு செய்யப்படும் என்று சிபிசிஐடி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் துப்பாக்கியால் சுட்ட அதிகாரியை கைது செய்து, அவருக்கு கடுமையான தண்டனை அளிக்காவிட்டால் தானும், தனது குடும்பத்தாரும் தீக்குளிக்கப் போவதாக தில்ஷனின் தாயார் நேற்று தெரிவித்தார்.