பத்மநாப சுவாமி கோயில் பொக்கிஷம்: தொல்லியல் துறையின் ஆலோசனை கோரும் உச்ச நீதிமன்றம்
அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப் போகின்றனரா? தொல்லியல் துறையினர் குழுவை நியமித்து பாதுகாக்கப் போகின்றனரா? . குழுவினரின் பெயரை பரிந்துரைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் நகைகள், வைரங்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட அந்த பொக்கிஷங்கள் குறித்த மூல வரலாறு, அவற்றின் தொன்மை ஆகியவை குறி்த்தும் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஏ.கே. பட்நாயக் ஆகியோர் அடங்கிய குழு, இன்று இதற்கான உத்தரவை பிறப்பித்தது.
நீதிபதிகள் மேலும் கூறுகையில், நகைகள் பற்றி இதுவரை சரியாக மதிப்பிடப்படவில்லை. கடைசி அறையில் இருக்கும் நகைகளையும் கணக்கெடுத்த பின்பே நகைகளின் உண்மையான மதிப்பு தெரிய வரும்
எனவே நகைகளின் மதிப்பு குறித்து உச்சநீதிமன்றம் நியமித்துள்ள குழுவினரோ, அரச குடும்பத்தினரோ யாரும் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, பல நூற்றாண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த பத்மநாப சுவாமி கோயிலின் 5 ரகசிய அறைகள் திறக்கப்பட்டன. இதுவரை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், ஆபரணங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, வரும் 8 ம் தேதி கோவிலில் உள்ள கடைசி அறையை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதனை திறப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதால் திறப்பது தாமதமாகி வந்தது. தற்போது அந்த அறையையும் திறந்து பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொக்கிஷங்களை அரசு கோராது-கேரள முதல்வர்:
இந் நிலையில் இந்தக் கோவிலில் கிடைத்துள்ள பொக்கிஷங்கள் அனைத்துமே கோவிலுக்கே சொந்தமானவை. அவற்றை அரசு கோராது. அந்த பொக்கிஷங்களை கோவிலிலேயே வைத்து பாதுகாக்க வேண்டும். அதற்கான பாதுகாப்பை அரசு வழங்கும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.