தொடரும் பந்த்தால் இயல்பு நிலை பாதிப்பு- 10 தெலுங்கானா மாவட்டங்களும் முடங்கின
தெலுங்கானா போராட்டம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மத்திய அரசு இந்த விஷயத்தில் அரசியல் செய்யப் பார்ப்பதால் ஆத்திரமடைந்துள்ள தெலுங்கானா கூட்டுப் போராட்டக் குழுவினர் 2 நாள் பந்த்தை அறிவித்தனர். மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு 70க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள், 12 அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்எல்சிக்கள் என சரமாரியாக பதவி விலகவே மத்திய அரசு அரண்டு போயுள்ளது.
இந்த நிலையில் நேற்று தொடங்கிய 2 நாள் பந்த் காரணமாக தெலுங்கானா முழுவதும் வெறிச்சோடிக் கிடக்கிறது. சாலைப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள், வர்ததக மையங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன.
உஸ்மானியா பல்கலைக்கழககத்தில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 2வது நாளாக பந்த் நடந்தது. இன்றும் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் தெலுங்கானாவில் உள்ள 10 மாவட்டங்களும் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
ஹைதராபாத் மற்றும் தெலுங்கானா பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன, உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பஸ்களும் ஓடவில்லை.
அடுத்து பொருளாதாரத் தடையை ஏற்படுத்தும் வகையில் சாலைப் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்தை தடுக்கும் போராட்டங்களை மேற்கொள்ளப் போவதாக தெலுங்கானா கூட்டுப் போராட்டக் குழு அறிவித்துள்ளதால் நிலைமை மேலும் மோசமடையும் என்று அஞ்சப்படுகிறது.
ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியா?-ப.சி:
தனித் தெலுங்கானா கோரி ஆந்திராவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 98 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிடவில்லை என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், ஒரே நேரத்தில் பலரும் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் கட்சி வருத்தத்தில் உள்ளது என்றார்.
ஹைதராபாத் மற்றும் தெலுங்கானாவின் இதர பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.