சேனல்-4க்கு எதிராக வழக்கு தொடர இலங்கை அரசு தயங்குவது ஏன்?
கொழும்பு: சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளி பரப்பப்பட்ட இலங்கைக்கு எதிரான வீடியோ காட்சி பொய்யானது என்பதற்கான ஆதாரம் அரசிடம் இருந்தால் சேனல் 4 -க்கு எதிராக உடன் வழக்குத் தொடர வேண்டியதுதானே... அரசு தயங்குவது ஏன்?, என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்.
அக்குறஸ்ஸவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கூறியதாவது:
சேனல் 4 ல் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சியை இலங்கையர்கள் அனைவரின் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளாகவே நாம் பார்க்கிறோம். இந்தக் குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபிப்பது அரசின் கடமை. அந்த விடியோ காட்சி பொய்யானது என்பதற்கான ஆதாரம் அரசிடம் இருந்தால் சேனல் 4-க்கு எதிராக அரசு வழக்குத் தாக்கல் செய்யவேண்டும்.
இந்த வீடியோ காட்சி ஒட்டுமொத்த படையினர், மக்கள் மற்றும் இலங்கை அதிபர் ஆகியோரின் நற்பெயரைப் பாதிக்கக்கூடியது. அவ்வாறான வீடியோ காட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல், வெறுமனே பேசிக்கொண்டிருப்பதால் பயனில்லை.
இது அரசின் பொறுப்பின்மையைக் காட்டுகிறது. குற்றச் சிக்கலைத் தீர்க்க அரசு ராஜதந்திர பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டும். அதுவும் இடம்பெறவில்லை. ராஜதந்திர செயல்பாட்டில் நம்பிக்கையிழந்த அரசாகவே ராஜபக்சேவின் அரசு உள்ளது. ஒரு நாட்டுக்கு சர்வதேச அளவில் பிரச்னை எழும்போது அந்தப் பிரச்னையை ராஜதந்திர நகர்வின் மூலமாகவே தீர்க்க முடியும் என்பதுகூட இந்த அரசுக்கு தெரியவில்லை," என்றார்.