கனிமொழியுடன் மு.க.அழகிரி, திருமாவளவன் சந்திப்பு
டெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திஹார் சிறையில் உள்ள திமுக எம்பி கனிமொழியை அவரது சகோதரும் மத்திய அமைச்சருமான அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சந்தித்தனர்.
கனிமொழியை திமுக தலைவரும் அவரது தந்தையுமான கருணாநிதி, சகோதரர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஏற்கனவே சந்தித்தனர். இந் நிலையில் நேற்று முன்தினம் மு.க.அழகிரி கனிமொழியை சந்தித்துப் பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
2 ஜி ஊழல் வழக்கில் கனிமொழி எம்.பி. கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை திமுக தலைவர் கருணாநிதி இரண்டு முறை சிறையில் வைத்து பார்த்தார். மு.க. ஸ்டாலினும் அன்மையில் டெல்லி சென்று தனது சகோதரி கனிமொழியை சந்தித்தார். ஏராளமான திமுகவினரும் அவரை சிறையில் சந்தித்து வருகின்றனர்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் நேற்று கனிமொழியை சந்தித்துப் பேசினார். தி.மு.க. மகளிர் அணியை சேர்ந்த சங்கரி நாராயணன், காஞ்சனா கமலநாதன், கவிஞர் சல்மா, காரல் மாக்ஸ், கேரள மாநில தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளர் குமரி நாயர், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோரும் கனிமொழியை சந்தித்தனர்.
முன்னாள் அமைச்சர் துரைமுருகன், தி.மு.க. மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி ஆகியோரும் கனிமொழியை சந்தித்தனர். கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரும் நேற்று டெல்லி சென்றனர். இவர்களும் இன்று கனிமொழியை சந்திக்கிறார்கள்.
கோடை கால விடுமுறைக்குப் பிறகு நேற்று முன் தினம் டெல்லி சிறப்பு நீதிமன்றம் திறக்கப்பட்டது. இதையடுத்து 2ஜி வழக்கில் கைதாகியுள்ள ராசா, கனிமொழி உள்ளிட்டவர்கள் கடந்த 2 நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.
விமானத்தை தவறவிட்டார் ராசாத்தி அம்மாள்:
இதற்கிடையே டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்த திமுக தலைவர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் தாமதமாக வந்ததால் விமானத்தை தவறவிட்டார்.
சென்னையில் இருந்து டெல்லி வழியாக நியூயார்க் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ராஜாத்தி அம்மாளும், திமுக எம்பி வசந்தி ஸ்டான்லியும் பயணம் செய்வதாக இருந்தது. ஆனால், விமான நிலையத்துக்கு தாமதமாக வந்ததால் இருவரும் அந்த விமானத்தை தவறவிட்டனர்.
இதையடுத்து இன்னொரு விமானத்தில் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.