அழகிரி-மனைவி மீது ரூ.50 கோடி நில மோசடி புகார்
மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் அவர் மனைவி மீது ரூ.50 கோடி நில மோசடி புகார் தரப்பட்டுள்ளது.
மதுரை அருகே உத்தங்குடி நாகர் ஆலயத்தைச் சேர்ந்த பூசாரி சுப்பிரமணிய அய்யர் என்பவர் இது டொர்பாக முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பியுள்ள புகாரில், 'உத்தங்குடி நாகர் ஆலயத்திற்கு சொந்தமான தர்மசாஸ்தன டிரஸ்ட்டுக்கு நாகேந்திர அய்யர் என்பவர் 1936ம் ஆண்டு 23 ஏக்கர் நிலத்தை வழக்கினார்.
அப்போது இந்த நிலத்தை யாருக்கும் விற்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலத்தை விற்கலாம் என்று போலியாக ஆவணம் தயார் செய்யப்பட்டது.
அதன் பிறகு கோவையை சேர்ந்த லாட்டரி ஏஜெண்ட் மார்ட்டின் என்பவர் பத்திரத்தை அவர் பெயரில் பதிவு செய்தார். அதன் பிறகு முன்னாள் திமுக அமைச்சர் அன்பழகனின் உறவினர் சுகுமாறன் என்பவருக்கு பவர் பத்திரம் மாற்றி தரப்பட்டது.
இந்நிலையில் தயா சைபர் பார்க் நிர்வாக இயக்குநர் காந்தி அழகிரி (அழகிரியின் மனைவி) பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி ஆவணம் தயார் செய்து இந்த நிலத்தை விற்றுள்ளனர்.
ரூ. 50 கோடி மதிப்பிலான இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானதாகும். எனவே அதனை மீண்டும் கோவிலுக்கு மீட்டுத்தர வேண்டும் என்று கூறப்படுள்ளது.
இதுதொடர்பாக அழகிரி மற்றும் அவர் மனைவியை விசாரிக்க போலீஸ் தயாராகிறது.
சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் மீது நில அபகரிப்பு புகார்:
இதற்கிடையே சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் வெங்கடேசன் மீது மூதாட்டி ஒருவர் நில அபகரிப்பு புகார் கொடுத்துள்ளார்.
சென்னை பட்டாளம் தேவராஜ் தெருவைச் சேர்ந்தவர் சாந்தகுமாரி (67). அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
மேற்கண்ட முகவரியில் உள்ள எனது வீடு என் கணவரின் பூர்வீக சொத்தாகும். எனது மகன் திருமலை கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். அவருக்கு ஓட்டேரியைச் சேர்ந்த கமல் என்பவருடன் தொழில்ரீதியான பணம் கொடுக்கல், வாங்கல் இருந்தது.
இந்நிலையில் 98வது வட்ட திமுக செயலாளரும், கவுன்சிலருமான வெங்கடேசன் எனது மகனை மிரட்டி கமலுக்கு ரூ. 25 லட்சம் கொடுக்கச் சொன்னார். வெங்கடேசனின் உதவியாளர் ரகு அடியாட்களுடன் வந்து என்து மகனை மிரட்டினார். அவர்களுக்கு பயந்து கடந்த 2005ம் ஆண்டு கமலின் உறவினர் ஜெயந்தி குமாரி பெயரில் அடமானம் பத்திரம் ஒன்றை எழுதிக் கொடுத்தோம்.
கடந்த 2008ம் ஆண்டு பணம் தருகிறோம் எங்கள் வீட்டைத் திருப்பித் தாருங்கள் என்று கேட்டதற்கு வெங்கடேசன் முதலில் ரூ. 15 லட்சத்தை கட்சிக்கு நன்கொடையாக அளியுங்கள் என்றார். எனது கணவரையும், மகனையும் மிரட்டி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அந்த வீட்டை கிரையம் செய்து கொண்டார்.
அநியாயமாக தனது பூர்வீக சொத்து பரிபோனதால் என் கணவர் மன உளைச்சலால் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். தொல்லை தாங்க முடியாமல் என் மகனும் வெளியூருக்கு சென்றுவிட்டான். தற்போது நான் கமலை சந்தித்து வீட்டை கேட்டேன். அதற்கு கமல் எங்களிடம் மிரட்டி எழுதி வாங்கிய வீட்டை வெங்கடேசன் ரூ. 15 லட்சத்திற்கு வாங்கிவிட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து தற்போது நான் வசிக்கும் வீட்டை உடனே காலி செய்யுமாறு நேற்றிரவு கவுன்சிலர் வெங்கடேசன், ரகு ஆகியோர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து என் வீட்டை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.