மக்கள் குறை தீர்க்க களம் இறங்கினார் சரத்-அதிகாரிகளை அழைத்து அறிவுரை
தென்காசி: தென்காசி எம்எல்ஏ சரத்குமார் தனது அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அதிகாரிகளை அழைத்து மக்களின் குறைகளைத் தீர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
தென்காசி தொகுதி எம்எல்ஏ சரத்குமார் தென்காசியில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்திற்கு சென்று பணிகளை பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் திரளானோர் சென்று சரத்குமாரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
திருமண உதவி தொகை, முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுக்களையும், சாலை வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி, பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறிந்த மனுக்களையும் பொதுமக்களிடம் இருந்து சரத்குமார் பெற்றுக் கொண்டார்.
இந்த மனுக்களை பரீசிலனை செய்த சரத்குமார் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனுக்களை அனுப்பி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.
மேலும் அரசி்ன் அனைத்து துறை அதிகாரிகளையும் எம்எல்ஏ அழைத்து தொகுதியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள், நடக்க இருக்கும் வளர்ச்சி பணிகள், தேவைப்படும வளர்ச்சி பணிகள் குறித்து கலந்துரையாடல் செய்தார்.