விப்ரோவில் வேலை வாங்கித் தருவதாக கூறி 37 பேரிடம் பண மோசடி-தமிழக பெண் உள்பட 4 பேர் கைது
பெங்களூர்: விப்ரோவில் வேலை வாங்கித் தருவதாக கூறி 37 பேரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக சத்யப்பிரியா என்ற 28 வயது தமிழகப் பெண் உள்பட 4 பேரை பெங்களூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பிகாரைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன், ஆந்திராவைச் சேர்ந்த முகம்மது அஸார், தமிழகத்தைச் சேர்ந்த சத்யப் பிரியா, கேரளாவைச் சேர்ந்த நாராயணா என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் கிட்டத்தட்ட ரூ. 2 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஜோதிபிரகாஷ் மிர்ஜி கூறுகையில், முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோவில் வேலை வாங்கித் தருவதாக கூறி கிட்டத்தட்ட 37 பேரிடம் இவர்கள் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். இந்தக் கும்பலின் தலைவி போல சத்யப்ரியா செயல்பட்டுள்ளார். வேலை தேடி வருவோரை அடையாளம் கண்டு அவர்களை அணுகுவார் பிரியா. பின்னர் அவர்களிடம் நம்பகத்தன்மையுடன் பேசி அவர்களின் அசல் கல்வி சான்றிதழ்களை வாங்கி விடுவார். பின்னர் விப்ரோவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் கறப்பார்.
பின்னர் அவர்களை விப்ரோ வளாகத்திற்கே கூட்டிச் செல்வார். அங்கு தனது கூட்டாளிகளை, விப்ரோவில் வேலை பார்த்து வரும் அதிகாரிகள் போல நடிக்க வைத்து அவர்களிடம் இவர்களை பேச வைப்பார். பின்னர் தான் கூட்டி வந்தவர்களுக்கு போலியான இன்டர்வியூவையும் நடத்துவார்.
அதன் பின்னர் வருடத்திற்கு ரூ. 2.94 லட்சம் சம்பளத்துடன் கூடிய சாப்ட்வேர் பயிற்சி என்ஜீனியர்கள் என்ற வேலை கிடைத்திருப்பதாக கூறி போலியான அப்பாயின்ட்மென்ட் ஆர்டரையும் வழங்குவார்.
அதன் பிறகு பிரியாவும் அவரது கூட்டாளிகளும் கம்பி நீட்டி விடுவார். இவர்களிடம் வேலை கோரி பணம் கொடுத்த ஒருவருக்கு அவர்களின் நடத்தை மீது சந்தேகம் வந்தது. இதையடுத்து போலீஸில் புகார் கூறினார். அதன் பிறகே இக்கும்பலின் மோசடி செயல் குறித்து தெரிய வந்தது.
இந்த நான்கு பேருமே பண மோசடியில் ஈடுபட்டது இதுவே முதல் முறையாகும். கடந்த 40 நாட்களுக்குள் 37 பேரிடம் இவர்கள் மோசடி செய்து பணத்தைப் பறித்துள்ளனர்.
இவர்களிடமிருந்து ரூ. 58.43 லட்சம் மதிப்புள்ள பொருட்கள், ஏடிஎம் கார்டுகள், பான் கார்டுகள், தங்க நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகனங்கள், போலியான வேலை நியமன கடிதங்கள் உள்ளிட்டவையும் சிக்கியுள்ளன.
பிடிபட்ட நான்கு பேரில் மூன்று பேர் நிர்வாகவியல் படிப்பு படித்தவர்கள், நல்ல கல்வித் தகுதியைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்ப்யூட்டர் அறிவும் நிரம்பியவர்களாக இருப்பதால் இந்த மோசடியை மிகத் திறமையாக செய்துள்ளனர்.
இந்த மோசடிச் செயலில் விப்ரோ ஊழியர்கள் யாருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றார் மிர்ஜி.