மும்பை குண்டுவெடிப்பு நாட்டின் இதயத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்-மகா. முதல்வர்
மும்பை: மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு நாட்டின் இதயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் கூறியுள்ளார்.
மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், இந்த குண்டுவெடிப்புகளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 81 பேர் காயமடைந்துள்ளனர்.
மும்பை இந்தியாவின் வணிகத் தலைநகர் என்பதால் மீண்டும் மும்பையைக் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். இருப்பினும் கடந்த காலங்களைப் போல இல்லாமல் இந்த முறை அனைத்துத் தரப்பினரும் விரைந்து செயல்பட்டுள்ளனர்.
மும்பையில் நடந்த தாக்குதல் நாட்டின் இதயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். யார் இதற்குக் காரணம் என்பது குறித்து இப்போது ஆராயவில்லை. எங்களது முக்கிய கவனம், குண்டுவெடிப்பில் சிக்கியவர்களை மீட்டு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில்தான் உள்ளது.
மக்கள் மிகவும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் சவான்.