பத்மநாபசாமி கோவிலுக்குப் பாதுகாப்பு அளிப்பது எப்படி-அறிக்கை தாக்கல்
திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனரான நாயர் தலைமையிலான மூத்த காவல்துறை அதிகாரிகள் குழு இதுதொடர்பாக ஆய்வு நடத்தி பரிந்துரையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி நாயர் தலைமையிலான குழு தற்போது அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது.
இதுகுறித்து நாயர் கூறுகையில், கோவிலில் மிகவும் நவீனமான, உயரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இதுகுறித்து அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.
கோவிலிலும், கோவிலைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகள் குறித்தும் அதில் கூறியுள்ளோம் என்றார்.
கோவிலை உயர் பாதுகாப்பு வளையமாக அறிவிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இங்கு அதிரடிப்படையினர் நிரந்தரமாக குவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
மேலும் கண்காணிப்பு கேமராக்களை கோவில் முழுவதும் பொருத்துவது, லேசர் சென்சார் கருவிகளை நிர்மானிப்பது, மெட்டர் டிடெக்டர் கருவிகளைப் பொறுத்துவது ஆகியவையும் பரிந்துரைகளில் ஒன்று என்று தெரிகிறது.
மேலும் கோவில் பாதுகாப்பைக் கண்காணிக்க 24 மணி நேர கண்காணிப்புக் கோபுரத்தை அமைக்கவும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம்.