படகு பழுது- நடுக்கடலில் 13 மீனவர்கள் தத்தளிப்பு: மீ்ட்பு பணி தீவிரம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் தத்தளிக்கும் 13 மீனவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி ஜோசப் தெருவைச் சேர்ந்தவர் புரூட்டஸ். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கன்னியாகுமரியைச் சேர்ந்த 13 மீனவர்கள் நேற்று காலை கன்னியாகுமரி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்தனர். பின்னர் கரைக்கு திரும்ப முயன்றபோது திடீரென படகு பழுதாகிவிட்டது. மீனவர்கள் பல்வேறு முயற்சி செய்தும் படகு சரியாகவில்லை.
இதையடுத்து செல்போன் மூலம் மற்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இது குறித்து கன்னியாகுமரி போலீசார், கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மீனவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்பதற்காக மற்றொரு படகு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பழுதான படகை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு முழுவதும் 13 மீனவர்களும் நடுக்கடலிலேயே தத்தளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.