திமுகவை அழிக்க கருணாநிதி குடும்பத்தால் மட்டுமே முடியும்: பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி: திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்பது உண்மைதான், கருணாநிதியும், அவரது குடும்பத்தினரையும் தவிர வேறு யாராலும் திமுகவை அழிக்க முடியாது என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
தேமுதிக நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம். முடிந்தவரை நல்லது செய்யுங்கள், நல்லது செய்ய முடியவில்லை என்றால் கெடுதல் செய்யாதீர்கள்.
இந்தியாவில் தமிழகம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது, 2ஜி ஊழல் வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. ஊழல் புரிந்தவர்களுக்கு தமிழக மக்கள் தண்டனை அளித்துள்ளனர் என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், சமச்சீர் கல்வி குறித்து 26ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது. அதுவரை தமிழக அரசு காத்திருப்பதில் தவறு இல்லை. சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி அதை நடைமுறைப்படுத்த நினைப்பது தவறல்ல.
குறைகளை நீக்கி, சேர்க்க வேண்டியதை சேர்த்து பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்பது உண்மைதான். கருணாநிதியும், அவரது குடும்பத்தினரையும் தவிர வேறு யாராலும் திமுகவை அழிக்க முடியாது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட அதிமுக, தேமுதிக கூட்டணி தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த கூட்டணி தொடர்ந்து நீடிக்கும்.
சில தனியார் கல்வி நிறுவனங்கள் தவறான முறையில் அதிக கட்டணம் பெறுவது குறித்து தமிழக அரசு உளவுத்துறை மூலம் கண்காணித்து வருகிறது. இது குறித்து கட்டாயம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்றார்.