தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி கோவையில் ரயில் மறியல் போராட்டம்
கோவை: பேரறிவாளன், முருகன், சாந்தனின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி கோவையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தனின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி இன்று கோவை ரயில் நிலையம் முன்பு போராட்டம் நடந்தது. இதில் திரண்ட பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், ஆதி தமிழர் பேரவை, நாம் தமிழர் கட்சியினர், சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டக்காரர்கள் ரயில் நிலையத்திற்குள் நுழைந்துவிடாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் அவர்களை மீறி போராட்டக்காரர்கள் ரயில் நியைத்திற்குள் புகுந்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கு. ராமகிருஷ்ணன் கூறியதாவது,
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தான் இங்கு நாங்கள் கூடியுள்ளோம். இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு அவர்களின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும். ஆட்சியாளர்களுக்கு எங்கள் உணர்வைத் தெரிவிக்கத் தான் ரயில் மறியல் போராட்டம்.
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற வழக்கில் கோட்சேவின் தம்பி கோபால் ராம் கோட்சேவும் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதையும் முழுமையாக அனுபவிக்காமல் அவர் 16 ஆண்டுகளில் விடுதலை ஆனார்.
காந்தியை சுட்டுக் கொன்ற வழக்கில் 16 ஆண்டுகளில் ஒருவர் விடுதலையாகியிருக்கிறார். ஆனால் எந்த தவறும் செய்யாத இந்த 3 பேர் 21 ஆண்டுகள் தங்கள் இளமைக் காலத்தை சிறையிலேயே கழித்துள்ளனர். காந்தி பிறந்த மண்ணில் தூக்கு தண்டனை வேண்டுமா என்று கேட்டு தான் நாங்கள் ரயில் மறியல் செய்கிறோம் என்றார்.
ரயில் நிலையத்திற்குள் புகுந்தவர்கள் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு கோஷங்கள் எழுப்பினர். போலீசார் கஷ்டப்பட்டு போராட்டக்காரர்களை வெளியேற்றினர். பின்னர் மங்களூர் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தபோது மாணவர்கள் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு அந்த 3 பேரையும் விட்டுவிடுங்கள், எங்களை ஏற்றிக் கொள்ளுங்கள் என்று கோஷமிட்டனர். போலீசார் ஒரு வழியாக அவர்களையும் அப்புறப்படுத்தினர்.