ராஜீவ் கொலை குற்றவாளிகளை வைத்து அரசியல் நடத்தும் திராவிடக் கட்சிகள்-பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்
மதுரை: கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் வாழும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரையும் வைத்து, திராவிட கட்சிகள் அரசியல் விளையாட்டு நடத்தி வருவதாக, பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க., செயலாளர் முருகேசன் திருமண விழாவில், பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது, நிலப்பிரச்னை தொடர்பாக பெருநாழி போலீஸ் காவல் நிலயைத்தில் ஊராட்சித் தலைவர் முத்துராமலிங்கம் மீது பா.ஜ.க., மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் முத்திருளப்பன் புகார் கொடுத்தார்.
ஊராட்சித் தலைவர் முத்துராமலிங்கம் அடியாட்களுடன் காவல் நிலையத்திற்கு வந்து, புகார் கொடுத்தவரை தாக்கியுள்ளார். இதை போலீசார் கண்டு கொள்ளவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் நடந்த அராஜகம், இந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் தொடர்கிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.
பார்லிமென்டை தாக்கிய அப்சல் குருவிற்கு ஆதரவாக காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா பேசியுள்ளார். இது இந்திய ஜனநாயகத்திற்கு விரோதமானது. மத்திய அமைச்சராக இருந்தவர், இது போன்று பேசுவது அபத்தமானது.
கடந்த 2000ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி, குற்றவாளி நளினிக்கு மட்டும் தண்டனையை ஆயுளாக குறைக்க உதவியுள்ளார். ஆனால், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. முதல்வர் ஜெயலலிதா, முதல் நாள் சட்டசபை கூட்டத்தில், தூக்குத் தண்டனையை நீக்கும் அதிகாரம் தனக்கில்லை என கூறியவர், அதன்பின் ஏன் ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றினார்?
கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் செத்து, செத்து வாழும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரையும் வைத்து, திராவிட கட்சிகள் அரசியல் விளையாட்டு நடத்தி வருகின்றன. வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் பா.ஜ.க., போட்டியிடும். எங்கள் தலைமையை ஏற்கும் கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம், என்றார்.