உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிப்போருக்கு தே.மு.தி.க., தி.மு.க., வரவேற்பு
சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட விரும்போர், வரும் 12ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்குமாறு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மற்றும் தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்பும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவருக்கும் விருப்ப மனுக்கள் 4ம் தேதி காலை 11 மணி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
இந்த விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து 12ம் தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும். மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் தலைமை கழகத்தில் வழங்கப்படும்.
மாநகராட்சி மேயர் பதவிக்கு 15 ஆயிரம் ரூபாய், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்டக் கழக அலுவலகங்களில் உரிய கட்டணத் தொகையை செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
நகராட்சி தலைவர் பதவிக்கு ரூ.5 ஆயிரம், நகராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 2 ஆயிரம் ரூபாய், பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 2,500 ரூபாய், பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 500 ரூபாய், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு 5 ஆயிரம் ரூபாய், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.2 ஆயிரம் கட்டணமாக செலுத்தவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., பொது செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தி.மு.க.வினர் மாவட்ட கழகத்திடம் இருந்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். போட்டியிட விரும்பும் பொறுப்பு மற்றும் முழு விவரங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். மாவட்ட கழக அலுவலகத்தில் படிவம் பெற இயலாதவர்கள், முரசொலி நாளிதழில் வெளிவந்துள்ளபடி விண்ணப்பப் படிவத்தை தயாரித்து, மாவட்ட கழகத்தில் கொடுக்க வேண்டும்.
மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 20 ஆயிரம் ரூபாயும், மாநகராட்சி மன்ற உறுப்பினர் 5 ஆயிரம் ரூபாயும், நகர மன்றத் தலைவர் 10 ஆயிரம் ரூபாயும், நகர மன்ற உறுப்பினர் 2 ஆயிரம் ரூபாயும், பேரூராட்சி மன்ற உறுப்பினர் 500 ரூபாயும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் 5,000 ரூபாயும்,, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் 1,000 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்கான தொகுதியில் போட்டியிட விரும்புகிறவர்கள் இந்த கட்டணத்தில் பாதித் தொகையை செலுத்தினால் போதுமானது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அந்தந்த மாவட்ட செயலாளர் அல்லது பொறுப்பாளரிடம் அல்லது தலைமைக் கழகத்தில் செப்டம்பர் 5 முதல் 12ம் தேதிக்குள் உரிய கட்டணத்துடன் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.