ராகுல், பிரியங்கா ஆகியோரால் என்னைப் புரிந்து கொள்ள முடியும்: அரித்ரா
டெல்லி: எனது பெற்றோர் முருகன், நளினி ஆகிய 2 பேரும் குற்றமற்றவர்கள். எனது நிலையை ராகுல் மற்றும் பிரியங்காவில் புரிந்து கொள்ள முடியும் என நளினியின் மகள் ஹரித்ரா தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், நளினி, பேரறிவளவன், சாந்தன் உள்ளிட்ட 4 பேருக்கு, கடந்த 1999ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கைதான போது கர்ப்பமாக இருந்த நளினிக்கு சிறையில் பிறந்த மகள் அரித்ரா (19).
தனது பெற்றோரை விடுவிக்க உதவுமாறு கோரி சோனியா காந்தி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு அரித்ரா லண்டனிலிருந்து கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
ராஜீவ் காந்தி கொலை எனது பெற்றோரான நளினியும், முருகனும் குற்றமற்றவர்கள் என நம்புகிறேன்.
அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நினைத்தால், எனக்கு மன நிலை பாதிப்பது இருக்கிறது. எனது குழந்தை பருவம் மிகவும் துயரமானதாக இருந்தது.
எனது தந்தையின் செயல் குறித்து நான் ஆத்திரப்பட்டேன். ஆனால் அவர் என்ன நடந்தது என்பதை விளக்கிக் கூறிய பிறகுதான் அவர் மீது தவறில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். நடந்த சம்பவங்களை என் தந்தை கண்ணீரோடு என்னிடம் பகிர்ந்து கொண்டார். வாரந்தோறும் எனக்கு பெற்றோர் கடிதம் எழுதுகின்றனர்.
நடந்த சம்பவம் (ராஜீவ் படுகொலை) மிகவும் மோசமானது, துயரமானது. இருப்பினும் எனது பெற்றோர் குற்றமற்றவர்கள். இந்த தண்டனைக்கு தகுதியற்றவர்கள். அவர்களின் அருகாமை இல்லாமல் நான் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளேன். இதை கடந்த 20 ஆண்டுகளாக தந்தையை இழந்த கொடுமையை அனுபவித்து வரும் ராகுலும், பிரியங்காவும் புரிந்து கொள்வார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
தனது தாயாரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க உதவியதற்காக சோனியாவுக்கு இதயத்தின் அடி ஆழத்திலிருந்து நன்றி கூறுவதாகவும் அரித்ரா கூறியுள்ளார்.