நில அபகரிப்பு புகாரில் திருச்செங்கோடு தி.மு.க., நகராட்சி தலைவர் நடேசன் கைது
திருச்செங்கோடு: நில அபகரிப்பு வழக்கில் திருச்செங்கோடு தி.மு.க., நகராட்சி தலைவர் நடேசனை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் அடுத்த கீரம்பூரைச் சேர்ந்த வசந்திக்கு திருச்செங்கோடு - ப.வேலூர் சாலையில், சித்தாளந்தூர் முக்கிய சாலையில், 2.20 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, திருச்செங்கோடு, ரங்கசாமிப் பிள்ளைத் தெருவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ராஜவேலு, ஈரோட்டை சேர்ந்த ராஜா மனைவி கமலத்திடம் வாங்கியதாக போலி ஆவணம் தயார் செய்து, திருச்செங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த நிலத்தை ராஜவேலுவிடம் இருந்து, தி.மு.க. நகரச் செயலரான திருச்செங்கோடு தி.மு.க., நகராட்சி தலைவர் நடேசன் வாங்கியுள்ளார். இதில், 1 கோடியே, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, வெறும், 2 லட்சம் ரூபாய்க்கு கிரயம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வசந்தி, நாமக்கல் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் நாமக்கல் மாவட்ட நில அபகரிப்பு பிரிவு போலீசார் விசாரித்து, திருச்செங்கோடு தி.மு.க., நகராட்சி தலைவர் நடேசனை கைது செய்தனர். அதன்பின், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், தலைமறைவாக உள்ள முன்னாள் கவுன்சிலர் ராஜவேலு உட்பட, 10 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.