டெல்லி குண்டுவெடிப்பில் இறந்த தூத்துக்குடி துறைமுக அதிகாரி-உடல் இன்று வருகிறது
டெல்லி: டெல்லி குண்டுவெடிப்பில் தூத்துக்குடி துறைமுக அதிகாரி பத்ரன் உயிரிழந்துள்ளார். காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தஅவர் நேற்று உயிரிழந்தார். இவரையும் சேர்த்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. பத்ரனின் உடல் இன்று, விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படுகிறது.
தூத்துக்குடி துறைமுகத்தில் மேற்பார்வை இன்ஜினியராக பணியாற்றியவர் பத்ரன் (57). கடந்த 6ம் தேதி தூத்துக்குடி துறைமுகம் தொடர்பான வழக்கு ஒன்றில் ஆஜராக தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்குள்ள லோடி ரோட்டில் உள்ள விடுதியில் தங்கினார்.
கடந்த 7ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு சென்றபோது, அங்கு குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த பத்ரன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பத்ரன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இத்தகவல் அறிந்த துறைமுக அதிகாரிகள் டெல்லிக்கு விரைந்தனர். பத்ரனின் உடலை இன்று டெல்லியில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்படும். இன்ஜினியர் பத்ரனுக்கு, வடிவுராணி என்ற மனைவியும், மகள், மகன் ஆகியோர் உள்ளனர்.