முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல்: வைகோ
சென்னை: முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கம்பம் கே.எஸ்.அப்பாஸ் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை மிரட்டியவர்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கம்பம் கே.எஸ். அப்பாஸ் இல்லத்தில் இன்று (15-ம் தேதி) காலையில் அத்துமீறி தீயநோக்கத்துடன் மர்ம நபர்கள் நுழைந்திருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். கடந்த 30 ஆண்டுகளாக முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தமிழ்நாட்டு உரிமைகளை காப்பாற்ற அப்பாஸ் கடுமையாக போராடி வருகிறார். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
முல்லைப்பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு அன்மையில் முடிவு செய்துள்ளது. இடைவிடாது தமிழ்நாட்டுக்காகப் போராடி வருபவர் அப்பாஸ். அவருக்கு பெரும் கேடு செய்யும் நோக்குடன் முயற்சி நடந்திருப்பதாகவே அஞ்சுகிறேன்.
எனவே, காவல் துறையினர் இந்த பிரச்சனையில் மிகத்தீவிர கவனம் செலுத்தி விசாரணை செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார்? அவர்களைத் தூண்டி விட்டவர்கள் யார்? இதன் பின்னணி என்ன என்பதைத் துப்பு துலக்கி கண்டுபிடித்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.