தைவானில் கடலில் மூழ்கியது சரக்கு கப்பல்: 6 பேர் பலி, 4 பேர் மாயம்
தைபே (தாய்வான்): பனாமா நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் புயலில் சிக்கி இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியதில், 6 பேர் பலியாகினர். மேலும் 4 பேரை காணவில்லை.
பனாமா நாட்டை சேர்ந்த ஜூவய் சிங் என்ற சரக்கு கப்பல், 21 கப்பல் பணியாளர்களுடன் சென்றது. தைவான் நாட்டிலுள்ள கீலூங் துறைமுகத்தில் இருந்து 11,500 டன் சரக்குகளுடன் கடலில் சென்றது. அடுத்த 90வது நிமிடத்தில் கடலில் வீசிய புயலில் சிக்கி, கப்பல் அப்பகுதியில் இருந்த பாறையில் மோதி 2 துண்டாக பிளந்து கடலில் மூழ்கியது.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும், ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் பலியாகினர். 11 பேர் காப்பற்றப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. மேலும் காணாமல் போன 4 பேரை, மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். இதில் 3 கப்பல் பணியாளர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்.
இந்த கப்பலில் ஏற்றப்பட்டிருந்த 315.5 டன் கச்ச எண்ணெய், கடலில் கலந்துள்ளதால், மீட்புப் பணிகளில் துரிதமாக செயல்பட முடியவில்லை. மேலும் கடல்நீர் கடுமையாக மாசுப்பட்டுள்ளது. கடலில் எண்ணெய் பரவலை தடுக்க, எண்ணெய் உள்வாங்கி அட்டைகள் (அப்சர்வன்ட் சீட்) ஆங்காங்கே மிதக்க விடப்பட்டுள்ளன. மேலும் எண்ணெய் கசிவை கண்டுபிடிக்க ரேடார் மூலம் கண்டுபிடிப்பு கருவியை பயன்படுத்தி வருகின்றனர்.