நிலமோசடி வழக்கில் தி.மு.க. பேச்சாளர் காக்காவடி கணேசன் கைது
கரூர்: கரூரில் நிலமோசடி வழக்கில் தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர் காக்காவடி கணேசன் உள்ளிட்ட 8 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கரூர் கே.வி.பி நகரில் அபி டெக்ஸ் என்ற பெயரில் ஜவுளி வியாபாரம் செய்து வருபவர் சுப்பிரணியன் (48). இவரது தொழிலை விரிவுபடுத்துவதற்கு பணம் தேவைப்பட்டது. இதற்காக எல்.என்.எஸ். பகுதியில் உள்ள தனது 2012 சதுரஅடி நிலைத்தை குத்தகைக்கு வைத்துக் கொண்டு, நடராஜன் என்பவரிடம் 1 லட்சம் ரூபாய் கடன் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை. எனவே, கிரிராஜன் என்பவரிடம் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து, பணம் வேண்டுமெனில் வெற்றுப் பேப்பரிலும், புரோ நோட்டிலும் கையெழுத்து போட்டு தர வேண்டும் என நடராஜனும், கிரிராஜானும் சுப்பிரமணியிடம் தெரிவி்த்துள்ளனர்.
அவர்கள் கூறியபடியே வெற்றுப் பேப்பரிலும், புரோ நோட்டிலும் கையெழுத்து போட்டு தந்துள்ளார் சுப்பிரமணியன். ஆனால் அவர்கள் குறித்த காலத்தில் பணத்தையும் தரவில்லை. சுப்பிரமணியன் கொடுத்த ஆவணங்களையும் திரும்ப தரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், புன்னம்சத்திரம் பகுதியில் சுப்பிரமணியன் நின்ற போது, அங்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்திச் சென்று சின்ன தாராபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கிரிராஜன் பெயரில் பொது அதிகார பத்திரம் பெற்றுள்ளனர். அந்த பத்திரத்தை பயன்படுத்தி, கிரிராஜன் சண்முக சுந்தரம் என்பவருக்கு அந்த நிலைத்தை விற்பனை செய்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் இது குறித்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், சுப்பிரமணியனின் நிலத்தை அபகரிக்கும் நோக்குடன், தி.மு.க. தலைமை கழக பேச்சாளரான காக்கவாடி கணேசன், கிரிராஜன், சுந்தர்ராஜன், சதாசிவம், சண்முகசுந்தரம், நடராஜ், சிவசாமி, திருமூர்த்தி ஆகியோர் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து இவர்கள் 8 பேர் மீதும் கடத்தல் மற்றும் மோசடி (420) பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். கரூரில் தி.மு.க. பேச்சாளர் நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.