பாக்.கில் அச்சான கள்ள நோட்டுகள் நெல்லையில் பறிமுதல்: 2 பேர் கைது
நெல்லை: பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் நெல்லையில் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தானிலிருந்து ரூ.100, ரூ.500, ரூ.1000 கள்ள நோட்டுகள் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்குள் அதிகளவில் புழக்கத்தில் விடப்பட்டு வருவதாக உளவுத்துறையினர் மத்திய, மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த 2 வாரத்திற்கு முன் டெல்லியில் அனைத்து மாநில போலீஸ் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கள்ள நோட்டுகளை கடத்துபவர்கள் மற்றும் அதனை புழக்கத்தில் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அவர்களை எளிதில் ஜாமீனில் வரமுடியாத அளவுக்கு தண்டனை பிரிவுகளில் சில மாற்றங்கள் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
இதன் பேரில் தமிழக டிஜிபி ராமானுஜம் அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்தார். நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதாரி உத்தரவி்ன் பேரில் நெல்லை மாவட்ட சோதனைச்சாவடிகளில் போலீசார் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும், கள்ள நோட்டுகள் கடத்தலையும் தடுக்கும் பொருட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று வாசுதேவநல்லூர் விலக்கில் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், எஸ்ஐ பண்டாரம் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு பைக்கில் வந்த இருவரை பிடித்து சோதனையிட்டனர். அவர்களிடமிருந்து ஒரு தோல் பையில் ரூ. 1 லட்சத்து 10 மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த குருமூர்த்தி, விருதுநகர் மாவட்டம் சேத்தூர் சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன என்பதும் குருமூர்த்தி மீது கோவில்பட்டி, தூத்துக்குடி உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் கள்ள நோட்டு தொடர்பாக 26 வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த கள்ள நோட்டு கும்பல் தலைவன் ஜெகன் மூலம் தமிழகத்தில் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் புழகத்தில் விடப்படுவதாகவும், அவனுக்கு பல ஊர்களில் ஏஜெண்டுகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்த ஜெகனை கைது செய்ய தனிப்படையினர் சென்னை விரைந்துள்ளனர்.