ஆம்புலன்ஸ் வாகனத்தில் தீ: இரண்டு முதியவர்கள் கருகி உயிரிழந்தனர்
திருவனந்தபுரம்: மண்ணெண்ணெய் குடித்த குழந்தைக்கு அவசர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ்சில் ஏற்றி சென்ற போது, அந்த ஆம்புலன்ஸ் தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து அதில் இருந்த தனது பேத்தியைக் காப்பாற்றச் சென்ற தாத்தாவும், பாட்டியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள கல்லரா பகுதியை சேர்ந்தவர் மன்சிலில் அப்துல் வாஹித் (70). இவரது மனைவி சுஹராபீவி (58). இவர்களின் மகன் திலீப் என்பவரது மகள் ஆயிஷா (2). வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை ஆயிஷா திடீரென தெரியாமல் மண்ணெண்ணெய்யை எடுத்து குடித்துவிட்டாள்.
சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த ஆயிஷாவை, உடனடியாக அருகிலுள்ள கல்லரா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளித்துவிட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், ஆயிஷாவை தூக்கி கொண்டு திலீப், அவரது மனைவி சலீனா, வாஹித், சுஹாராபீவி என மொத்தம் 7 பேர் சென்றனர்.
எஸ்.ஏ.டி.மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து ஏதோ சத்தம் கேட்டது. அப்போது வாகனத்தை நிறுத்தி சோதித்தனர். அப்போது ஆம்புலன்ஸ்சில் ஆக்சிஜன் சிலிண்டர் இருந்த இடத்தில் இருந்து அதிகளவிலான புகை வந்ததுள்ளது.
அது என்ன என பார்ப்பதற்குள் ஆலம்புலன்ஸ் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ்சின் பின்பகுதியில் இருந்த குழந்தை ஆயிஷா உட்பட அனைவரும் இறங்கினர். வாகனத்தின் முன்பகுதியில் இருந்த வாஹித் மற்றும் சுஹராபீவி ஆகியோரை இறக்குவதற்குள் உடலில் அதிகளவிலான தீக்காயமடைந்தனர்.
அப்பகுதியினர் வேகமாக வந்து, விபத்தில் சிக்கியவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி, வாஹித் மற்றும் சுஹராபீவி ஆகியோர் இறந்தனர். மற்ற 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் முற்றிலும் எரிந்து நாசமானது. ஓடிக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் தீப்பற்றி எரிந்ததற்கான காரணம் தெரியவில்லை. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.