முதலில் சென்னையைப் பிடிப்போம், பிறகு கோட்டையைப் பிடிப்போம்- ராமதாஸ்
உள்ளாட்சித் தேர்தலையொட்டி தமிழகம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பல முனைப்போட்டி நிலவுவதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் மாநிலமே பரபரப்பாக உள்ளது.
சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் வார்டுகளுக்கான பாமக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் சென்னை தியாகராயநகர் மேட்லி சாலையில் நடந்தது. அந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சித் தலைவர் ஜி.கே. மணி, சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து ராமதாஸ் பேசியதாவது,
திமுக ஆட்சியைப் பிடிக்கும் முன்பு கடந்த 1967-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியைத் தான் முதலில் பிடித்தது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து நிற்கிறது. முதலில் ரிப்பன் மாளிகையைப் பிடிப்போம் பின்பு 2016-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலி்ல் வென்று புனித ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றுவோம்.
தற்போது சென்னை மாநகராட்சி மிகப் பெரியதாக உள்ளது. தாம்பரம், அம்பத்தூரை புதிய மாநகராட்சிகளாக்க வேண்டும் என்று பாமக சட்டசபையில் வலியுறுத்தியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் சிறியதாக இருந்தால் தான் ஒழுங்காக கவனம் செலுத்த முடியும். கடந்த 44 ஆண்டுகளாக ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளையும் சீரழித்துள்ள திராவிடக் கட்சிகளை வரும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் ஓரங்கட்ட வேண்டும்.
மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்கின்றன திராவிடக் கட்சிகள். ஆனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் தர மறுக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு இருக்கும் அதிகாரத்தை குறைக்க வேண்டும். அவர்களை வெறும் கண்காணிப்பாளர்களாக்க வேண்டும். தற்போது உள்ளாட்சிகளில் நாற்காலி வீச்சு தான் நடக்கிறது. இந்த நிலை மாற வேண்டும் என்றார்.