ஈராக்கில் தீவிரவாதிகள்-ராணுவம் துப்பாக்கி சண்டை: 13 பேர் பலி
பாக்தாத்: ஈராக்கில் தற்கொலை படையினரிடம் சிக்கிய பிணைக் கைதிகளை விடுவிக்க சென்றபோது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 13க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
ஈராக் நாட்டின் அன்பார் மாகாணத்தில் உள்ள நாட்டின் மேற்கு பகுதியின் தலைமை போலீஸ் நிலையத்தை, தற்கொலைப் படையை சேர்ந்த 6 பேர் கைப்பற்றினர். அவர்களை தாக்காமல் இருக்க அப்பாவி மக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து கொண்டனர்.
பிணைக் கைதிகளை விடுவிக்க ஈராக் பாதுகாப்பு படையினர் களமிறங்கினர். அப்போது 2 தரப்பினருக்கும் கடும் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 13 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தற்கொலைப் படையில் எத்தனை பேர் பலியானார்கள் என்பது தெரியவில்லை. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது, துப்பாக்கி சூட்டிற்கு பின், தற்கொலைப் படையினரிடம் இருந்த காவல் நிலையம் மீண்டும், போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அந்த சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். இதில் போலீஸ் அதிகாரி ஒருவரும், பொதுமக்களில் ஒருவரும், உட்படுவர். இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம், என்றனர்.