அமைச்சர் செந்தூர் பாண்டியன் மகன் போட்டியின்றி கவுன்சிலராக தேர்வு
செங்கோட்டை நகர்மன்ற தலைவர் பதவிக்கு 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் நேற்று 2 பேர் வாபஸ் பெற்றனர். இதனை அடுத்து 8 பேர் களத்தில் உள்ளனர். அதிமுக சார்பில் மோகனகிருஷ்ணன், திமுக சார்பில் ரஹூம், காங்கிரஸ் சார்பில் முத்துசாமி, தேமுதிக சார்பில் காதர் ஓலி, சுயேட்சைகளாக அதிமுகவை சேர்ந்த வெங்கடேஷ், தமுகவை சேர்ந்த ஷேக் அப்துல் காதர், அருணாசலம், மாடசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
24 வார்டுகளில் 10வது வார்டில் வேட்பு மனு செய்த 3 பேரில் 2 பேர் நேற்று தங்களது மனுவை வாபஸ் பெற்றனர். அதிமுக எம்ஜிஆர் .மன்ற இணை செயலாளரும், தமிழக கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் மகனுமான கிருஷ்ணமுரளி 10வதுவார்டில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். மீதம் உள்ள 23 வார்டுகளில் மொத்தம் 89 பேர் போட்டியிடுகின்றனர்.
கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் பதவிக்கு 1 சுயேட்சைகள் 6 அரசியல் கட்சிகள் உள்பட 7 பேர் களத்தில் உள்ளனர்.
கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த 12 பேரில் 5 பேர் நேற்று வேட்பு மனுவை விலக்கிக் கொண்டனர். தற்போது அதிமுகவை சேர்ந்த முத்துலெட்சுமி, திமுகவை சேர்ந்த சைபுன்னிசா, காங்கிரசை சேர்ந்த சந்திரா, மதிமுக சார்பில் சாந்தி, புதிய தமிழகம் சார்பில் ராணி, தேமுதிக சார்பில் ஜெயந்தி, சுயேட்சையாக அப்துல்லா பேகம் ஆகிய 7 பேர் போட்டியிடுகின்றனர்.
அது போல கடையநல்லூர் நகராட்சியில் உள்ள 33 வார்டில் 22வது வார்டில் வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் ராசையாவிற்கு எதிராக யாரும் மனு செய்யாததால் அவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அது போல 7வது வார்டில் சீதாலெட்சுமி, பாப்பா என்ற இருவர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் பாப்பா நேற்று வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் சீதா லெட்சுமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருவருக்கும் நேற்று வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. மீதம் உள்ள 31 வார்டுகளில் 147 பேர் போட்டியில் உள்ளனர்.