ஏறிய ஏணியை எட்டி உதைத்த அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்- ஜி.ரா.
சிதம்பரம்: ஏறிய ஏணியை எட்டி உதைத்துத் தள்ளி விட்டது அதிமுக. அக்கட்சிக்கு உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.
சிதம்பரத்தில் நடந்த பிரசாரத்தின்போது அவர் பேசுகையில்,
எங்களது அணி 3-வது அணியா என கேட்கிறார்கள். திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, அதிமுக உள்ளிட்ட வேறு சில கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. அகில இந்திய அளவிலான கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சியாக உள்ள தேமுதிகவும் கூட்டணி அமைத்துள்ளது. எனவே இது 3-வது அணி அல்ல. முதல் அணியாகும்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றதற்கு அதிமுகவின் பங்களிப்பு உண்டு என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் நாங்கள் இல்லை என்றால் அதிமுக ஆட்சி அமைத்திருக்க முடியாது. அதிமுகவுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். எண்ணிக்கை பற்றி கவலைப்படாமல் நாங்கள் சட்டமன்றத் தேர்தலில் உண்மையாக உழைத்தும், வலுவான பிரசாரம் மேற்கொண்டும் ஆட்சியில் அமர வைத்தோம். ஆட்சியில் அமர்ந்தவுடன் எங்களை கழற்றிவிட்டதால் ஆளுங்கட்சிக்கு சரியான பாடம் புகட்ட அவசியம் ஏற்பட்டுள்ளது.
1992 முதல் திமுக, அதிமுக மாறி, மாறி ஆட்சி பொறுப்பேற்று வந்த போதும் உள்ளாட்சிகளுக்கு உரிய நிதியை வழங்காமலும், அதிகாரத்தை வழங்காமலும் இருந்து வந்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் சுயமாக செயல்படவும், அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற வேண்டும் என்றார் அவர்.