சொத்து விவரம் குறித்து ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் சிபிஐ ரெய்டு
ஹைதராபாத்: கடப்பா எம்.பியும், முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், காங்கிரஸுக்குப் பெரும் தலைவலியாக விளங்கி வருபவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் ஹைதராபாத் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்து விவரம் குறித்து அவர்கள் ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் கைது செய்யப்படக் கூடும் என்ற பரபரப்பும் ஹைதராபாத்தில் எழுந்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ஜெகனின் லோட்டஸ் பான்ட் வீட்டில் தற்போது சிபிஐ ஆய்வில் ஈடுபட்டுள்ளது. லோட்டஸ் பான்ட் வீடு உள்ளிட் சொத்துக்களின் மதிப்பு குறித்து ஆராயப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஒரு எஸ்.பி தலைமையில் இந்த சோதனை நடந்து வருகிறது. மேலும் ஜெகனுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள சில தொழிலதிபர்களின் வீடுகளிலும் ரெய்டு நடந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து சிபிஐ எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த ரெய்டுகளைத் தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் கைது செய்யப்படக் கூடும் என்ற பரபரப்பும் நிலவுகிறது.