கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எதியூரப்பா ஜாமீன் மனு இன்று விசாரணை
பெங்களூர்: நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பாவின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
நில ஒதுக்கீடு தொடர்பான ஊழல் விவகாரத்தில் சிக்கிய எதியூரப்பா மீது லோக் ஆயுக்தா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் முன் ஜாமீன் கோரியிருந்தார் எதியூரப்பா. ஆனால் அதை லோக் ஆயுக்தா நீதிமன்றம் தள்ளுபடி செய்து அவரைக் கைது செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி சரணடைந்தார் எதியூரப்பா. சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உடல் நலக்குறைவு காரணமாக சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு நெஞ்சு வலிப்பதாகக் கூறிய அவரை பெங்களூரில் உள்ள ஜெயதேவா இதயவியல் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அவர் அங்கிருந்தபோதே உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனு இன்றைக்கு (20ம் தேதிக்கு) ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
இந் நிலையில் மருத்துவமனையில் செய்யப்பட்ட சோதனைகளில் அவருக்கு இதயக் கோளாறு ஏதும் இல்லை என்று தெரியவந்தது. அதே நேரத்தில் அவருக்கு நீண்ட காலமாகவே நீரிழிவு நோயும், ரத்தக் கொதிப்பும் உள்ளதை உறுதி செய்த மருத்துவமனை, அவருக்கு மனச் சோர்வும், நரம்பியல் பிரச்சனையான பார்க்கின்சன்ஸ் நோயின் ஆரம்பகட்ட அறிகுறியும், முதுகு வலியும், தைராய்ட் பிரச்சனையும் இருப்பதாகவும் கூறிவிட்டு நேற்று டிஸ்சார்ச் செய்துவிட்டது.
இதையடுத்து மீண்டும் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டிய அவர், நிருபர்களின் கண்ணில் படாமல் தப்பி இன்னொரு அரசு மருத்துவமனையான விக்டோரியா மருத்துவமனைக்குச் சென்றார். அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் ஒரு வழியாக நேற்று சிறைக்கு சென்றார்.
ஆனால், அவர் சிறையை தவிர்த்து மருத்துவமனைகளில் சுற்றுப் பயணம் செய்து வந்ததற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்ததால், நேற்று மீண்டும் சிறைக்கே சென்றுவிட்டார்.
இந்நிலையில் அவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடக்கிறது.