கூடங்குளம் மக்கள் அச்சத்தைப் போக்க 15 பேர் கொண்ட நிபுணர் குழு- மத்திய அரசு அமைத்தது
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி அப்பகுதி மக்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நவம்பர் மாதத்தில் அணுமின் நிலையம் செயல்படத் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அணுமின் நிலையம் மூலம் கிடைக்கும் மின்சாரம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியானது. அணுமின் நிலையத்தை மூடினால் தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கும். எனவே கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க நிபுணர் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்திருந்தார். அதன்படி இன்று 15 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் விவரம் வருமாறு,
1. வி. சாந்தா, அடையாறு புற்றுநோய் மையத் தலைவர்
2. ஏ. இ. முத்துநாயகம், நாகர்கோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணை வேந்தர்
3. எம். ஆர். அய்யர், சர்வதேச அணுசக்தி கழகத்தின் கதிர்வீச்சு பாதுகாப்பு துறையின் முன்னாள் தலைவர், ஓய்வு
4. சி. எஸ். பரமேஷ், மும்பை, டாடா நினைவு மருத்துவமனையின் மருத்துவர் மற்றும் துணை பேராசிரியர்
5. எம். என். மத்யஸ்தா, ஓய்வு பெற்ற பேராசிரியர், மங்களூர் பல்கலைக்கழம்( வெப்ப சூழலியல் நிபுணர்)
6. என். சுகுமாரன், சென்னை, வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கூல் ஆஃப் லைஃப் சயின்சஸ் தலைவர்
7. ஏ. கே. பாய், பேராசிரியர், சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிஷரீஸ் எஜுகேஷன், மும்பை
8. ஹர்ஷ் கே. குப்தா, நிலநடுக்க நிபுணர், பேராசிரியர், நேஷனல் ஜியோபிசிகல் ஆய்வு மையம், ஹைதராபாத்
9. டி.வி. ஆர். மூர்த்தி, ஐஐடி மெட்ராஸ்
10. கண்ணன் அய்யர், ஐஐடி பாம்பே
11. எஸ். கே. மேத்தா, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் உலைப் பிரிவு தலைவர், ஓய்வு
12. எஸ். கே. ஷர்மா, அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர்
13. கே. பாலு, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அணு கழிவு மேலாண்மை பிரிவின் தலைவர், ஓய்வு
14. எஸ். எம். லீ, பாதுகாப்பு ஆராய்ச்சி கழகம், கல்பாக்கம்
15. டபுள்யூ. ஸ்டீபன் அருள்தாஸ் கந்தையா, கன நீர் வாரியத் தலைவர், ஓய்வு
இந்த குழுவினர் கூடங்குளத்திற்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து அணு மின் நிலையம் தொடர்பான மக்களின் அச்சத்தைப் போக்கவிருக்கின்றனர்.
ஆனால் கூடங்குளம் போராட்டக்காரர்கள் இந்த குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கூடங்குளம் போராட்டத்தில் இன்று பெருமணல் கிராம மக்கள்:
இந் நிலையில் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை கிராமத்தில் 3வது கட்ட போராட்டம் நடந்து வருகிறது. அங்குள்ள தேவாலயம் அருகே அமைக்கப்பட்டுள்ள போராட்ட பந்தலில் தினமும் ஒவ்வொரு கிராமத்தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று 2வது நாளாக உண்ணாவிரதம் நடந்தது. இதில் தோமையார்புரம், இடிந்தகரை, கூடங்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி நாட்டுபடகு மீனவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இன்று பெருமணல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.