அனுமதி பெறாமல் புது வீட்டில் குடியேற்றம்: ரூ. 4.75 லட்சம் அபராதம் கட்டிய சச்சின்
மும்பை: லிட்டில் மாஸ்டர் சச்சின் மும்பையில் தான் கட்டிய சொகுசு வீட்டுக்கு குடியேற்ற சான்றிதழ் பெறாமலேயே குடியேறியதால் ப்ரிஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு ரூ. 4.75 லட்சம் அபராதம் செலுத்தியுள்ளார்.
மும்பை, மேற்கு பெர்ரி கிராஸ் சாலையில் இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின் ரூ. 80 கோடி செலவில் சொகுசு பங்களா கட்டினார். கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி அந்த பங்களாவில் குடியேறினார். ஆனால் வீடு குடியேறுவதற்கு முன்பு ப்ரிஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனில் அவர் குடியேற்ற் சான்றிதழ் பெறவில்லை. இதனால் அவருக்கு ரூ. 4.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம் கட்டுவதில் இருந்து சச்சினுக்கு விலக்கு அளிக்குமாறு மஹாராஷ்டிரா அரசு ப்ரிஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனைக் கேட்டுக் கொண்டது. இருப்பினும் சச்சின் ரூ. 4.75 லட்சம் அபராதத் தொகையை கட்டினார்.
இதையடுத்து அவரது பங்களாவுக்கு குடியேற்ற சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
வீடு குடியேறுவதற்கு முன்பு குடியேற்ற சான்றிதழ் வாங்க வேண்டும் என்பது சச்சினுக்கு தெரியாது. அபராதம் செலுத்துவதில் இருந்து அவர் எந்த விலக்கையும் விரும்பவில்லை. எனவே, தானும் சட்டத்திற்குட்பட்டவன் என்பதால் முழுத் தொகையும் செலுத்தினார் என்று ஒருவர் தெரிவித்தார்.