அத்வானி யாத்திரையில் பங்கேற்க பாஜக தலைவர்களுக்கு ஆர்எஸ்எஸ் தடை!?
டெல்லி: பாஜக தலைவர் அத்வானி நடத்தி வரும் ரத யாத்திரையில் பங்கேற்க அந்தக் கட்சியின் தலைவர்களுக்கு ஆர்எஸ்எஸ் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருப்புப் பணத்துக்கு எதிராக அவர் நடத்தி வரும் யாத்திரையில், அத்வானியின் மகள் பிரதிபா, குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரும் கர்நாடக பாஜக எம்பியான அனந்த் குமார் ஆகியோர் தான் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர்.
யாத்திரைக்காக உருவாக்கப்பட்டுள்ள பேருந்தில் அத்வானியோடு இவர்கள் தான் முன் வரிசையில் வெளியில் தெரியும் வகையில் அமர்ந்துள்ளனர். மற்ற தலைவர்கள் பஸ்சுக்குள் 3,4வது வரிசையில் தான் அமர்ந்துள்ளனர்.
அத்வானி அவ்வபோது பஸ்சுக்குள் இருந்து லிப்டில் வெளியே எட்டிப் பார்த்து கூட்டத்தினரை நோக்கி கையை அசைப்பதும், பேசுவதுமாக உள்ளார்.
முக்கிய தலைவர்களுக்கு போதிய முக்கியத்துவம் தராமல் தனிப்பட்ட முறையில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள அத்வானி முயல்வதாக ஆர்எஸ்எஸ் கருதுவதாகத் தெரிகிறது. ஏற்கனவே பிரதமர் பதவிக்கு போட்டியிடக் கூடாது என்ற நிபந்தனையோடு தான் இந்த யாத்திரைக்கே ஆர்எஸ்எஸ் அனுமதி தந்தது.
இந் நிலையில், அத்வானி பிற தலைவர்களை ஒதுக்கிவிட்டு தன்னை முன்னிலைப்படுத்துவதால், இந்த யாத்திரையில் பங்கேற்க பாஜக தலைவர்கள் பலருக்கும் ஆர்எஸ்எஸ் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த யாத்திரையில் முழு அளவில் பங்கேற்க வேண்டாம் என ஆர்எஸ்எஸ் உத்தரவின்பேரில், பாஜக மூத்த தலைவர்களுக்கு அக் கட்சியின் தலைவர் நிதின் கட்காரி அட்வைஸ் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
யாத்திரையை ஒட்டி நடக்கும் பொதுக் கூட்டங்களில் மட்டுமே பங்கேற்கலாம் என்றும், அதுவும் பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களில் மட்டும் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்றால் மட்டும் போதும் என்றும் அவர்களுக்கு கட்காரி அட்வைஸ் தந்துள்ளார் என்கிறார்கள்.
அத்வானியின் இந்த யாத்திரையில் கட்காரி ஒரே ஒரு இடத்தில் மட்டும் தலையைக் காட்டிவிட்டு திரும்பி வந்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது. அதே போல சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி போன்ற முக்கிய தலைவர்களும் இந்த யாத்திரையில் பெரிய அளவில் பங்கேற்கவில்லை.
அதே போல பாஜக மாநிலத் தலைவர்களும் இந்த யாத்திரையில் முழு அளவில் பங்கேற்க வேண்டாம் என்றும், தலையைக் காட்டினால் மட்டும் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது என்கிறார்கள்.