கட்டுமானப் பணியில் ஈடுபட்ட 4 தொழிலாளர்கள் சாரம் சரிந்து விழுந்து பலி
சென்னை: சென்னையில் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்ட போது சாரம் இடிந்து விழுந்து 2 கட்டுமானத் தொழிலாளர்களும், திருச்சியில் பழைய சுவரை இடித்த போது 2 தொழிலாளர்களும் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர்.
சென்னை, தாம்பரத்தை அடுத்த சானிடோனியத்தில் ஏற்றுமதி மண்டலமான மெப்ஸ் உள்ளது.இங்குள்ள விமான உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் இங்கு ஜல்லி போட கட்டியிருந்த சாரத்தில் நின்று கட்டிட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமான சாரம் இடிந்து விழுந்தது. இதில் ஜல்லி போடும் பணியில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சியை சேர்ந்த சின்னப்பன் (50). கடப்பேரியை சேர்ந்த கடவுள் (48) உள்ளிட்ட 2 பேரும் கட்டிட இடுபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு, குரோம்போட்டை மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பலியாகினர்.
மேலும் காயமடைந்த சம்பத், ராஜாமணி, முரளி, ராமசந்திரன், தண்டபாணி உள்ளிட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறி்த்து தாம்பரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சியில் 2 பேர் பலி:
இதற்கிடையே, திருச்சியில் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் கட்டிட இடிப்பாடுகளில் சிக்கி பலியாகினர்.
திருச்சி மாவட்டம், மேலசிந்தாமணியில் உள்ள பழைய வீடு ஒன்றை இடித்து புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. நேற்று காலையில் 9 தொழிலாளர்கள் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது எதி்ர்பாராதவிதமாக இடித்து கொண்டிருந்த சுவர், 2 தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய குடமுருட்டியை சேர்ந்த மாரியாயி(55) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் படுகாயமடைந்த கீரனூரை சேர்ந்த கொத்தனர் முருகன்(40) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.