2 மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை திடீரென ரத்து செய்தார் மோடி!
ஐந்து மாநிலங்ளுக்கு பல கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இவற்றில் பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகியவற்றில் பாஜக ஆட்சி நடந்துவருகிறது. இங்கு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிர பிரசாரத்தில் பாஜக ஈடுபட்டுள்ளது. மேலும் வாஜ்பாய் வருகிறார், மோடி வருகிறார் என்றும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மோடி தனது இரு மாநில பிரசாரத்தை திடீரென ரத்து செய்துள்ளாராம். இதுகுறித்து மோடியின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத் மாநிலத்தில் முதல்வருக்கு நான்கு நாட்களுக்கு மேல் பல்வேறு அலுவல் பணிகள் இருப்பதால், நடக்கவுள்ள பஞ்சாப், உத்தரக்காண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் நரேந்திரமோடியால் கலந்து கொள்ள இயலாது என கூறப்பட்டுள்ளது.
இது பாஜகவுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. உ.பியிலும் அவர் பிரசாரம் செய்ய மாட்டார் என்றே கூறப்படுகிறது.
மோடியின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் உமா பாரதியை வைத்து புதுப் பிரச்சினை உருவாகி வருவதாக சலசலப்புக் கிளம்பியுள்ளது. அவர் உ.பி. தேர்தலில் போட்டியிடுகிறார். ஒரு வேளை பாஜக தெரியாமல் வெற்றி பெற்று விட்டால் முதல்வர் பதவியில் அமரவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதை உள்ளூர் பாஜக தலைவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இதனால் ஏற்பட்ட குழப்பம்தான் தற்போது மோடி பிரசார பயண ரத்து விவகாரத்தில் எதிரொலிப்பதாக கூறப்படுகிறது.