காதல் கணவருடன் கமிஷனர் அலுவலகத்தில் கல்லூரி பேராசிரியை தஞ்சம்
சென்னை: காதலரை ரகசிய திருமணம் செய்து கொண்ட சென்னை கல்லூரி பேராசிரியை பாதுகாப்பு கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் பிரீத்தி(30) சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். அவரது தந்தை ரிசர்வ் வங்கி ஊழியர். அயனாவாரத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி(27). அவர் உடற்பயிற்சி நிறுவனம் ஒன்றில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.
பார்த்தசாரதியிடம் உடற்பயிற்சி கற்க சென்ற பிரீத்திக்கு அவருடன் காதல் மலர்ந்தது. பார்த்தசாரதியை விட வயதில் மூத்தவரான பிரீத்தி, அவரை திருமணம் செய்து கொள்ள பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கடந்த வாரம் காதலர்கள் வீட்டைவிட்டு வெளியேறி, பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று காலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு கணவருடன் வந்த பிரீத்தி பாதுகாப்பு கோரி கமிஷனரிடம் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில் தனது பெற்றோர் தரப்பில் இருந்து தனக்கும், தன்னுடைய கணவருக்கும் மிரட்டல் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அயனாவரம் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.