கொலையாவதிலிருந்து ரவுடியைக் காக்க தவறிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
சென்னை: சென்னையில் பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்திக்(35). பிரபல ரவுடி. கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அவர், கடந்த 6ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். நேற்று மாலை அவர் நண்பர் ஆல்பர்ட் உடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது அவரை 10 பேர் கொண்ட கும்பல் கொலை செய்யும் எண்ணத்துடன் துரத்தியது. கோட்டூர்புரம் அருகே கார்த்திக்கை சுற்றி வளைத்த அந்த கும்பல் அவரை நடுரோட்டியிலேயே வெட்டிக் கொலை செய்தது.
இது குறித்து தகவல் அறிந்த கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். விசாரணையி்ல் ரவுடிகள் இடையே ஏற்பட்ட மோதலில் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.
எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ரவுடிகள் பல குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். அதில் ஒரு கோஷ்டியைச் சேர்ந்த முரளி என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கார்த்திக் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு கார்த்திக் ஜாமீனில் வெளியே விடுதலையான போது எதிர் தரப்பினர் அவரை கொலை செய்ய வாய்ப்புள்ளது என்று உளவுப் பிரிவு போலீசார் எச்சரித்திருந்தனர்.
ஆனால் இதனை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் கவனத்தில் கொள்ளவில்லை. மேலும் ரவுடி கார்த்திக்குக்கு கொலை வழக்கில் ஜாமீன் வழங்கினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எற்படும் என்பதால் போலீசார் முன் எச்சரிக்கையுடன் செயல்படவில்லை.
இதனால் ஜாமீனில் கார்த்திக் வெளியே வந்தவுடன் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்று உளவுப்பிரிவு போலீசார் குற்றம் சாட்டினர். இதனையடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்க தவறிய எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வனை சஸ்பெண்டு செய்ய போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார்.