நிபுணர் குழுவுக்கு மிரட்டல்-கேரள அமைச்சர் மீது நடவடிக்கை கோரும் நெடுமாறன்
சென்னை: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஆய்வு செய்து வரும் நிபுணர் குழுவின் அறிக்கை எதிராக இருந்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கேரள அமைச்சர் பகிரங்க மிரட்டல் விடுத்திருப்பதை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வன்மையாக கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பான உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கை கேரள அரசுக்கு எதிராக இருக்குமானால் அதனை ஏற்க மாட்டோம் என கேரள அமைச்சர் கே. பாபு என்பவர் பகிரங்கமாக கூறியிருக்கிறார்.
நிபுணர் குழுவின் அறிக்கை பிப்ரவரி மாதம் இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட இருக்கும் நேரத்தில் அந்தக் குழுவில் உள்ளவர்களை நிர்பந்தப்படுத்தும் வகையிலும் மிரட்டும் வகையிலும் கேரள அமைச்சர் பேசியிருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்.
எனவே அவர் மீது உச்ச நீதிமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு வற்புறுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
ஏற்க மாட்டாராம்..:
முன்னதாக நிபுணர் குழுவின் அறிக்கை கேரள அரசுக்கு எதிராக இருக்குமானால் அதனை ஏற்க மாட்டோம் என்று கேரள மீன் வளத்துறை அமைச்சர் கே.பாபு கூறியிருந்தார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்குத் தேவையான அளவு தண்ணீர் தர தயாராக உள்ளோம். ஆனால், அணையின் பாதுகாப்பும் மிகவும் முக்கியமானது.
தண்ணீர் தொடர்பாக எந்தப் பிரச்சனையும் கிடையாது. ஆனால், அணையின் பலம் தொடர்பாகத்தான் பிரச்சனை உள்ளது.
தமிழகத்தில் ஏராளமான மலையாள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்துடன் நல்ல உறவு இருந்து வருகிறது. முல்லைப் பெரியாறு மிகவும் பழமை வாய்ந்த அணையாகும், பழைய தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட அணையாகும். அணை உடைந்தால் 5 மாவட்டங்களில் வசிக்கும் 35 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவர்.
இந்த அணை தொடர்பான நிபுணர் குழு அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. ஆனால், கேரள அரசுக்கு எதிராக அந்த அறிக்கை இருக்குமானால் அதனை ஏற்க மாட்டோம். இந்தப் பிரச்ச்னையில் பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்றார்.