'தாண்டவபுரத்தை' எரித்த இந்து மக்கள் கட்சிக்கு தமுஎகச கண்டனம்!
மதுரை: தாண்டவபுரம் நாவலை தீயிட்டு கொழுத்திய இந்து மக்கள் கட்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்ச் செல்வன், மாநிலப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினரும், தமிழகத்தின் புகழ் பெற்ற எழுத்தாளருமான சோலை சுந்தர பெருமாள் எழுதிய நாவல் தாண்டவபுரம். இது பக்தி இயக்க காலத்தை பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். இந்த நாவல் சைவ மதத்தை விமர்சிப்பதாகக் கூறி கோவையில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் நாவல் பிரதியை எரித்துள்ளனர்.
ஆனால் போலீஸ் விசாரணையின் போது, அவர்கள் யாருமே இந்த நாவலைப் படிக்கவில்லை என்று கூறியுள்ளனர். கேள்விப்பட்டதை வைத்து இந்த நாவலை எரித்துள்ளனர்.
ஒரு படைப்பின் மீது யாருக்கும் விமர்சனமோ கருத்து வேறுபாடோ இருக்கலாம். அதை வெளிப்படுத்த ஜனநாயகப் பூர்வமான எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. ஆனால் பொது இடத்தில் ஒரு படைப்பை தீயிட்டு எரிப்பது என்பது மிகவும் இழிவான செயலாகும்.
கருத்துச் சுதந்திரத்திற்கும், படைப்புச் சுதந்திரத்திற்கும் எதிரான வன்முறை நடவடிக்கையாகவே இதைக் கருத வேண்டும். இந்த வன்முறையை தமுஎகச வன்மையாகக் கண்டிக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.