கூடங்குளம் அணு உலைக்கு எதிராக சென்னையில் பிப்.26-ல் அனைத்துக் கட்சி மாநாடு
சென்னை: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக சென்னையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு பிப்ரவரி 26-ந் தேதி நடைபெற உள்ளது என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
அணு உலைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஜப்பான் நாட்டில் புகுசிமாவில் நடந்த அணு உலை விபத்து மக்களை அச்சமடைய செய்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலைய பகுதிகளில் வகிக்கும் மக்களும், அணு மின் நிலையத்தை தொடங்கக்கூடாது என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். யாருடைய தூண்டுதலின் பேரிலும் இந்த போராட்டம் நடைபெறவில்லை.
அணு உலைகள் நாட்டிற்கு வேண்டாம் என்று ஒத்த கருத்துள்ள இயக்கங்கள் இணைந்து சென்னையில் வரும் 26-ந் தேதி மாநாடு நடத்துகின்றது. மாநாட்டின் தொடக்கமாக அன்று காலை அண்ணா அரங்கத்தில் இருந்து பேரணி நடைபெறுகிறது. மாலையில், மயிலை மாங்கொல்லையில் மாநாடு நடக்கிறது.
வைகோ, ராமதாஸ், திருமாவுக்கு அழைப்பு
இந்த மாநாட்டில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். 80 ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.
தி.முக., அ.தி.மு.க.வுக்கு அழைப்பு இல்லை
அணுமின் நிலைய விஷயத்தில் தெளிவான நிலையை வெளிப்படுத்தாததால் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளை மாநாட்டுக்கு அழைக்கவில்லை. தமிழக அரசு அமைக்கவுள்ள வல்லுநர் குழுவில் போராட்டக்குழு உறுப்பினர்களும் இடம்பெற வேண்டும். இதுகுறித்து அரசிடம் பேச உள்ளோம் என்றார் அவர்.