ஈழத்தில் தமிழ்ப் பெண்கள் சீரழிக்கப்படவேயில்லை என்று பேசிய சிங்களப் பேராசிரியை வெளியேற்றம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நேற்று ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியை ஜீவா நிரியல்லா கலந்து கொண்டார்.
அவர் பேசும்போது இலங்கையில், குறிப்பாக ஈழத்தில் பெண்களுக்கு எதிராக, அதுவும் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக எந்தவிதமான குற்றச் செயல்களும் நடைபெறவில்லை. தமிழ்ப் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதாக கூறப்படுவதும் சரியல்ல என்று பேசியதாக தெரிகிறது.
இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. நாம் தமிழர் இயக்கம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிங்களப் பேராசிரியையே வெளியேறு என்ற கோஷத்துடன் கூட்ட அரங்குக்குள் புகுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஜீவா நிரியல்லாவை அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் வெளியேற்றி விட்டனர். அவர் இனிமேல் வர மாட்டார், எதிலும் பேச மாட்டார், அவரை திருப்பி அனுப்பி விட்டோம் என்று கூட்ட அமைப்பாளர்கள் தெரிவித்தனர். அதன் பின்னரே போராட்டம் நடத்தியவர்கள் திரும்பிச் சென்றனர்.