ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற முன் அனுபவம் தேவையில்லை: டிராய் அதிகாரிகள் சாட்சியம்
டெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் டிராய் முன்னாள் அதிகாரிகள் சாட்சியம் அளித்தனர்.
ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரி விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு, தொலைத் தொடர்பு துறையில் முன் அனுபவம் இருக்க வேண்டும் என, தொலைத் தொடர்பு சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், உரிமம் வழங்கப்படும் நிறுவனங்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதற்கான விதிகள் உள்ளன என்று, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) முன்னாள் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா சாட்சியம் அளித்தார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) முன்னாள் தலைவர் நிருபேந்திர மிஸ்ராவை, ராஜாவின் வழக்கறிஞர் சுஷில் குமார் நேற்று குறுக்கு விசாரணை செய்தார்.
அப்போது மிஸ்ரா கூறியதாவது:
தனியார் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்குவதற்கு முன், தொலைத் தொடர்பு அமைச்சகம் டிராயின் பரிந்துரையைப் பெற வேண்டும். டிராயின் பரிந்துரையை ஏற்பதில், தொலைத் தொடர்பு அமைச்சகத்திற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அது தொடர்பாக, டிராயின் மறுபரிசீலனைக்கு அனுப்ப வேண்டியது அவசியம்.
உரிமம் வழங்குவதற்கு முன், டிராயின் பரிந்துரையைப் பெறுவது அவசியம் என்பதில், டிராய்க்கும் தொலைத் தொடர்பு அமைச்சகத்திற்கும் இடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.
ஸ்பெக்ட்ரம் உரிமம் வேண்டி விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு, தொலைத் தொடர்பு துறையில் முன் அனுபவம் இருக்க வேண்டும் என்று, தொலைத் தொடர்பு சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், உரிமம் வழங்கப்படும் நிறுவனங்களுக்கு, என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பது பற்றி விதிகள் உள்ளன என்றார் அவர்.
சுஷில்குமாரை அடுத்து தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர் பெகுரா சார்பில், வழக்கறிஞர் மினோச்சா, குறுக்கு விசாரணை செய்தார். அப்போது மினோச்சா, நீங்கள் தொலைத் தொடர்பு செயலராக இருந்தபோது, டிராயின் பரிந்துரை பெறாமலே உரிமம் வழங்கப்பட்டதா? என்றார்.
அதற்கு மிஸ்ரா, நான் தொலைத் தொடர்பு செயலராக இருந்தபோது மொத்தம், 17 உரிமங்கள் வழங்கப்பட்டன. அப்போது, 2003ம் ஆண்டு டிராய் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் தான் உரிமம் வழங்கப்பட்டது. டிராய் பரிந்துரை தொடர்பாக, 2003ம் ஆண்டிலிருந்து 2008 வரை, சட்டத்தில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை' என்றார்.