தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் உயர்வு !
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் வணிக வளர்ச்சி துறையின் பொது மேலாளர் எஸ்.செல்வன் ராஜதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
பொது மக்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், சந்தை நிலவரப்படியும், வங்கியில் செலுத்தப்படும் வைப்புத் தொகைக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன்படி 15 நாட்கள் முதல் ஒரு வருடத்துக்கு உட்பட்ட வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் முதல் ஒரு சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.
15 முதல் 29 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், 30 முதல் 45 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது.
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாகவும், 180 நாட்கள் முதல் ஒரு ஆண்டுக்கு கீழ் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வட்டி விகிதம் 8.75 சதவீதத்தில் இருந்து 9.25 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி விகிதமாக 10.25 சதவீதத்தை ஒரு ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வழங்கி வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.