பிரணாப், உமர், அகிலேஷுக்கு என்மீது அவ்வளவு பயமா?- சல்மான் ருஷ்டி கிண்டல்
இந்திய டுடே நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள டெல்லி வந்த பிரபல ஆங்கில எழுத்தாளரான சல்மான் ருஷ்டிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியை புறக்கணித்த தலைவர்களுக்கு தன் மீது அவ்வளவு பயமா என்று ருஷ்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரபல பிரிட்டிஷ் - இந்திய எழுத்தாளரான சல்மான ருஷ்டி கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த இலக்கிய விழாவில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காத அவரது வருகைக்கு முஸ்லிம் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் விழாவில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் இந்தியா டுடே டெல்லி தாஜ் ஹோட்டலில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
கடந்த 2 நாட்களாக நடந்த அந்த நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி கலந்து கொண்டு உரையாற்றினார். இதனால் அந்த ஹோட்டலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ருஷ்டி கலந்து கொண்டதால் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் ஆகியோர் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தனர்.
இது குறித்து ருஷ்டி கூறுகையில், அடுத்த தலைமுறை தலைவர்களாக இருக்க வேண்டியவர்கள் இன்னும் பழங்காலத்து ஆட்கள் போன்று செயல்படுகின்றனர். இனியாவது அவர்கள் திருந்துவார்கள் என்று நம்புகிறேன். நிஜமாகவே அவர்கள் என்னைப் பார்த்து அவ்வளவு பயப்படுகிறார்களா? என்றார்.
முன்னதாக டெல்லி ஜும்மா மசூதி முன்பு முஸ்லிம்கள் சல்மான் ருஷ்டிக்கு எதிராக கோஷமிட்டனர். அவரை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிடக் கூடாது என்று அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கேட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.