ஆந்திராவில் 7 பேரவைத் தொகுதிகளில் விறுவிறு வாக்குப் பதிவு!
ஐதராபாத்: தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தங்களது திராணியை நிரூபிக்க காத்திருக்கும் சங்கரன்கோவில் தொகுதிக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுவது போல் ஆந்திரா மாநிலத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் கர்நாடகத்தின் ஒரு மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா
ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காலிறுதிப் போட்டியாக தற்போது வாக்குப் பதிவு நடைபெறும் 7 தொகுதிகளுக்கான தேர்தல் கருதப்படுகிறது.
இன்று வாக்குப் பதிவு நடைபெறும் 7 தொகுதிகளில் ஆறு பேரவைத் தொகுதிகள் தெலுங்கானா பகுதியில் உள்ளன. மற்றொரு தொகுதி கடலோர ஆந்திராவில் உள்ளது.
வாக்குப் பதிவு நடைபெறும் கொல்லாபூர், நகர்கர்னூல், மகபூப்நகர், கம்மாரெட்டி, அடிலாபாத், ஸ்டேஷன் கன்பூர் ஆகிய தொகுதிகள் தெலுங்கானா பகுதியிலும் கோவூர் தொகுதி மட்டும் கடலோர ஆந்திராவில் அடங்கும்.
தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் தெலுங்கானா பகுதியில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மகபூப்நகர் எம்.எல்.ஏ மரணமடைந்ததாலும் கோவூரில் வெற்றி பெற்ற தெலுங்கு தேச எம்.எல்.ஏ. ஜெகன் ரெட்டியை ஆதரித்து வெளியேறியதாலும் தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலில் மொத்தம் 13 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
தெலுங்கானா கோரிக்கைக்காக போராடி வரும் சந்திரசேகர் ராவின் தெலுங்கா ராஷ்டிரிய சமிதி, ஆளும் காங்கிரஸ் கட்சி, ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி ஆகிய அனைத்து கட்சிகளுக்குமே இத்தேர்தல் வாழ்வா? சாவா போராட்டமாகும்.
புதுக் கட்சி தொடங்கிய ஜெகன் ரெட்டி கோவூர் தொகுதியில் மட்டும் வேட்பாளரை களம் இறக்கியிருக்கிறார். இத்தொகுதியில் வென்று தமது பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவை ஜெகனுக்கு உண்டு.
கோவூர் தொகுதியில் கடந்த தேர்தலில் தெலுங்குதேசம் சார்பில் போட்டியிட்டு வென்ற பிரசன்ன குமார் ரெட்டி தற்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரது வெற்றி மூலமே ஜெகன் ரெட்டியின் கட்சியின் வலிமை வெளிப்படும்.
தற்போதைய 7 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலைத் தொடர்ந்து ஆந்திர மாநில பேரவைத் தேர்தலின் அரை இறுதிப் போட்டி என அழைக்கப்படும் வகையில் 17 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேதல் நடைபெற உள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் ஆந்திர சட்டப்பேரவையின் 7தொகுதிகளுக்கான இன்றைய தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கர்நாடகம்
கர்நாடக மாநிலத்தின் உடுப்பி-சிக்மளூர் மக்களவைத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலானது மற்ற கட்சிகளைவிட பாரதிய ஜனதா கட்சிக்குத்தான் சவாலானாது.
உடுப்பி-சிக்மளூர் தொகுதி எம்.பியாக இருந்த சதானந்த கவுடா, மாநில முதல்வராக பொறுப்பேற்றதால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது நடைபெறும் தேர்தலில் பாஜகவின் இளைஞர் அணியின் சுனில் குமார், காங்கிரஸ் கட்சியின் ஜெயபிரகாஷ் ஹெக்டே, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் போஜே கவுடா ஆகியோர் உட்பட 14 பேர் களத்தில் உள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியில் முதலமைச்சர் பதவி கேட்டு போராடி வரும் எடியூரப்பாவும் அவரது பரிவாரங்களும் இத்தேர்தலில் பிரச்சாரம் செய்யவில்லை.
தற்போதைய முதல்வர் சதானந்தாவின் சொந்த தொகுதி என்பதாலும் எடியூரப்பா குழு பிரச்சாரம் செய்யாத நிலையிலும் பாரதிய ஜனதா ஜனதா கட்சி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மேலும் இத்தொகுதியில் நக்சல்கள் நடமாட்டம் அதிகம் என்பதால் 251 வாக்குச் சாவடிகளிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.