இலங்கைக்கு எதிரான தீர்மானம் முழு வடிவம் பெற்றபின் முடிவெடுக்கலாம்: பிரதமர் மன்மோகன் சிங்
ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், இந்தத் தீர்மானம் இறுதி வடிவம் பெற்று வரும்போது இந்தியா தன் நிலையை அறிவிக்கும் என பிரதமர் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளார் ('என்னண்ணே சொல்றீங்க... இந்தியாவுக்கு சுதந்திரம் கெடைச்சிடுச்சா... எனக்கு தெரியவேல்லியே' - என்ற கவுண்டர் - செந்தில் காமெடி சமாச்சாரம் இது)
மேலும் தமிழகத்தில் சோனியா உருவபொம்மை கொளுத்தப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார் அவர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முழுவடிவம் இது:
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்கள் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம். இதற்கு அவர் 'தீர்மானம் முழு வடிவம் பெற்ற பிறகு முடிவெடுக்கலாம்' என்று எங்களிடம் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தி வருகின்றன. அரசியல் கட்சிகளிடையே உள்ள இந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியில் சில சமூக விரோத சக்திகள் தற்போது ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.
கொடும்பாவி என்ற பெயரில் உருவபொம்மையை கொளுத்துவதும், மத்திய காங்கிரஸ் தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதும் இங்கே நடைபெற்று வருகிறது. இது போன்ற நிகழ்வுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இங்குள்ள சில அமைப்புகள் தீவிரவாத உணர்வாளர்கள் என்ற போர்வையில் பிரச்சனையை திசை திருப்புகின்ற நடவடிக்கையை தொடர்ந்தால் காங்கிரஸ் இதனை அனுமதிக்காது.
அவர்களை முளையிலேயே கிள்ளி எறிய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தமிழகத்தில் அமைதி நிலவ உதவும் என்பதை தமிழக அரசு உணரும் என நம்புகிறேன், என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வரும் 22-ம் தேதி வாக்கெடுப்புக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது என்பதை யாராவது இவர்களுக்குச் சொல்லுங்கப்பா!