இலங்கை போரின்போது கருணாநிதி போட்ட உண்ணாவிரத நாடகம்: ராமதாஸ்
சென்னை: இலங்கையில் இறுதிகட்ட போர் நடந்தபோது காலையில் சாப்பிட்டுவிட்டு உண்ணாவிரதம் இருக்க வந்த திமுக தலைவர் கருணாநிதி போர் முடிந்துவிட்டதாக்க கூறி மதிய உணவு சாப்பிட வீட்டுக்கு சென்றுவிட்டார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
பாமக சார்பில் திராவிட மாயை குறித்த கருத்தரங்கு சென்னையில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது.
பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையில் நடந்த அந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில், "இலங்கையில் இறுதிகட்ட போர் நடந்தபோது திமுக தலைவர் கருணாநிதி காலை உணவை சாப்பிட்டுவிட்டு உண்ணாவிரதம் இருக்க வந்தார். 3 மணி நேரத்திற்கு பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி மதிய உணவு நேரத்தின் போது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். ஆனால் அதன் பின்னும் குண்டு வீசப்பட்டது. இது குறித்து கேட்டபோது மழை வி்ட்டும் தூவானம் விடவில்லை என்று கூறினார்.
போர் நடந்தபோது நான் பலமுறை கருணாநிதியை சந்தித்து போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினேன். இப்போது அவர் அண்ணா நூலகத்திற்காக தீக்குளிக்கப் போவதாக அறிவித்துள்ளார். உண்மையான போராளிகள் யாரும் அவ்வாறு சொல்ல மாட்டார்கள். தனி ஈழத்தின் மூலமே தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்," என்றார்.
திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சாதிப் பிரச்சனை குறைந்தபாடில்லை. மேலும் மக்கள் மதுவுக்கு அடிமையாவது அதிகரித்துள்ளது என்று அவர் மீண்டும் குற்றம்சாட்டினார்.
அந்த கருத்தரங்கில் தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு, திரைப்பட இயக்குநர் வி. சேகர், தமிழாலயம் இயக்குநர் கு. பச்சைமால், மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் க. சக்திவேல் ஆகியோர் பேசினர். முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி வரவேற்புரையாற்றினார். சென்னை மாவட்ட பாமக அமைப்புச் செயலாளர் மு. ஜெயராமன் நன்றி கூறினார்.