2014 தேர்தல்: ராகுல் காந்திக்கு சவாலாக இருப்பார் நரேந்திர மோடி - டைம்
இதுகுறித்து "மோடி என்றால் என்றால் பிஸினஸ்... ஆனால் அவரால் இந்தியாவை வழிநடத்த முடியுமா?" என்ற தலைப்பில் அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரையின் ஒரு பகுதி:
"இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸின் ராகுல் காந்திக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் இடையில்தான் உண்மையான போட்டி இருக்கும்.
ராகுல் காந்தியைத்தான் வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என களமிறக்க உள்ளது காங்கிரஸ். ஆனால் சமீபத்திய மாநில தேர்தல் தோல்விகள், அக்கட்சிக்கு இந்த விஷயத்தில் ஒரு தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது உண்மைதான்.
61 வயதான மோடி கடந்த 10 ஆண்டுகளாக குஜராத்தின் முதல்வராக இருக்கிறார். மிக வளர்ந்த, தொழில்மயமான மாநிலமாக குஜராத்தை மாற்றியிருக்கிறார். ஆனால், இவரை பிரதமர் வேட்பாளராக ஏற்பார்களா அனைத்துத் தரப்பினரும் என்பதில் சந்தேகமிருக்கிறது. காரணம், 2002-ல் குஜராத்தில் நடந்த கொடூரமான மதப் படுகொலைகள். மதச் சார்பற்ற அரசியல் பாதை என்ற இந்தியாவின் கொள்கைக்கே விரோதமாக மோடி பார்க்கப்படுகிறார். இந்தப் படுகொலைகளை அவர் ஒரு கட்டத்தில் ஆதரிக்கவும் செய்துள்ளார். எனவே மோடி பிரதமர் வேட்பாளர் எனும்பட்சத்தில் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் டென்ஷன் அதிகரிக்கும். மேலும் தீவிரவாதம் தலைதூக்கவும் வாய்ப்புள்ளது," என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கொடூர மதக் கொலைகளையும் பட்டியலிட்டுள்ளது டைம்.
"இந்த கலவரத்தின் போது அடைக்கலம் கோரி முஸ்லிம் தலைவர் இஷன் ஜாப்ரி வீட்டில் ஏராளமானோர் தஞ்சமடைந்தனர். வீட்டுக்கு வெளியே மதவெறி பிடித்த கூட்டம். பாதுகாப்பு கேட்டு அந்த தலைவர் பல முறை போலீசாருக்கு போன் செய்தும் யாரும் எட்டிப் பார்க்கவில்லை. அநியாயமாக 200-க்கும் மேற்பட்டோர் ஒரு இரவுக்குள் தீயில் வெந்து செத்தார்கள்.
இந்த படுகொலைகளுக்கு காரணம் என்று கூறி பெயருக்கு சிலரை கைது செய்தது மோடி அரசு. ஆனால் இன்னும்கூட மனித இனத்துக்கே அவமானம் தரும் அந்த கொடிய செயலுக்கு மாநில அரசு வருத்தம் தெரிவிக்கவில்லை. மோடியை ஒரு முழுமையான தலைவராக ஏற்க முடியாமல் இருப்பதற்கு இதுவும் முக்கிய காரணம்", என்கிறது அக்கட்டுரை.
கட்டுரை கிடக்கட்டும். மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்பதை, முதலில் அவரது கட்சியைச் சேர்ந்த மற்ற பிரதமர் வேட்பாளர்கள் ஒப்புக் கொள்வார்களா? அல்லது ஜெயலலலிதா பிரதமராக வரவேண்டும் என்ற லாபியை பாஜவுக்குள்ளேயே ஆரம்பித்திருக்கும் சோ ஏற்பாரா?
பார்க்கத்தானே போகிறோம்!