பாஜக தலைவர் அருண் ஜேட்லிக்கு ரூ.158 கோடி சொத்து!
ராஜ்யசபாவின் எதிர்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லி மூன்றாவது முறையாக மாநிலங்களை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார். குஜராத்தில் இருந்து போட்டியிடும் அவர் இன்று அதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதனுடன் தாக்கல் செய்யப்பட்ட பரிமாணப் பத்திரத்தில் தனது மற்றும் தனது மனைவி சங்கீதா ஜேட்லி பெயர்களில் ரூ.158.02 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர்கள் அருண் ஜேட்லி, விஜய் ருபாணி, கஞ்சிபாய் பட்டேல் மற்றும் ராஷ்ட்ரபால் ஆகியோரது பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அந்த 4 பதவிகளுக்கான தேர்தல் இந்த மாத துவக்கத்தில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பாஜக சார்பில் அருண் ஜேட்லி, ஷங்கர் வேகாத், மன்சுக் மாண்டவியா ஆகியோர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர். அவர்கள் 3 பேருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிடும் பிரவின் ராஷ்ட்ரபால் தனக்கு ரூ.90 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுதாக்கலின்போது தெரிவித்துள்ளார்.
ஜேட்லி தாக்கல் செய்த பரிமாணப் பத்திரத்தில் தனது பெயரில் ரூ.38.97 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், மனைவி பெயரில் ரூ. 38.36 கோடியும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜேட்லி பெயரில் ரூ.34.70 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களும், அவரது மனைவி பெயரில் ரூ. 46 கோடி அசையா சொத்துக்களும் உள்ளன.
இன்னொரு பாஜக வேட்பாளரான ஷங்கர் வேகாதின் சொத்து மதிப்பு ரூ. 5.8 கோடியாகும். மாண்டவியான் சொத்து மதிப்பு ரூ.1.51 கோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.