எனக்கு ரூ14 கோடி லஞ்சமாக கொடுக்க சிலர் முன்வந்தனர்: ராணுவ தலைமை தளபதி வீசும் "புது குண்டு"
ராணுவத்தின் ஊழல் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி தம்மை களங்கப்படுத்தவே சிலர் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் இந்த நாடகத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதும் சூத்திரதாரிகளைப் பற்றிய கூடுதல் தகவல்களும் விரைவில் தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணிக்குத் தெரியப்படுத்தினேன் என்றும் ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மறைமுகமாக தலைமை தளபதி வி.கே.சிங் சுட்டிக்காட்டினார்.
தம் மீது நம்பிக்கை இல்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் கருதினால் உடனே பதவியிலிருந்து விலகத் தயாராகவே இருக்கிறேன் என்றும் சிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சத்பிசிங், இந்த விவகாரம் விரிவாக விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் இது மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என்றார் அவர்.
ஏற்கெனவே பிறந்தேதி விவகாரம், அசாம் ரைபிள்ஸ் படைத் தலைவர் விவகாரம் ஆகியவற்றில் பாதுகாப்பு அமைச்சகத்துடன் மோதி வரும் தலைமை தளபதி சிங் இப்போது லஞ்சம் கொடுக்க முன்வந்ததாகவும் ஒரு குண்டை வீசியுள்ளார்.