ராதாபுரம் தாலுகாவில் 144 தடை உத்தரவு விலக்கப்படுமா? இன்று ஐகோர்ட் தீர்ப்பு
கூடங்குளம் அணு மி்ன் நிலையத்தை இயக்க தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு கடந்த 19ம் தேதி முதல் போலீசார் குவிக்கப்பட்டனர். அணு மி்ன் நிலைய வாயிலில் போராட்டக்குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து போராட்டக்குழு தலைவர் உதயகுமார், உறுப்பினர் புஷ்பராயன் உள்ளிட்ட 15 பேர் கடந்த 19ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இன்று 8வது நாளாக உண்ணாவிரத்ததை தொடர்கின்றனர்.
இதற்கிடையே அணு மின் நிலையத்தை இயக்க எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பாளையங்கோட்டை ஜவகர் மைதானத்தில் கடந்த 23ம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நக்சல் ஆதரவாளர் சதிஷ், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி வன்னி அரசு ஆகியோரை கியூ பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த 7 மாதங்களாக போராட்டக்குழு நடத்திய பல்வேறு போராட்டங்களின் வீடியோ பதிவை சேகரிக்கும் பணியில் கியூ பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் நக்சலைட்டுகள், வெளிமாநில, வெளிநாட்டு தீவிரவாதிகள் யாராவது பங்கேற்றேள்ளனரா என்பதை கண்டறிய வீடியோ தொகுப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக சென்னையிலிருந்து கியூ பிரிவு டிஎஸ்பி தலைமையிலான தனிப்பிரிவினர் வந்துள்ளனர். இதற்கிடையே ராதாபுரம் தாலுகாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவினை நீக்கக் கோரி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.